நீதிபதி லோயா மரணமும், அமித்ஷா மீதான குற்றச்சாட்டுகளும்.. பரபரப்பு வழக்கு கடந்து வந்த பாதை!
நீதிபதி லோயா மரணம் குறித்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.
டெல்லி: நீதிபதி லோயா மரணம் குறித்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கடந்த மார்ச் 16ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. லோயா இயற்கையாகத்தான் மரணம் அடைந்தார், அவரது வழக்கை நீதி விசாரணை செய்ய குழு அமைக்க முடியாது, இப்போது நடக்கும் விசாரணையே தொடரும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷாவை முக்கிய குற்றவாளியாக கருதி சிபிஐ நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இவ்வழக்கில் அமித்ஷா ஒவ்வொரு முறையும் ஆஜராக வேண்டும் எனவும் சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக இருந்த லோயா உத்தரவிட்டிருந்தார்.இது பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது. ஆனால் சர்ச்சை முடியும் முன்பே நீதிபதி லோயா திடீரென 2014-ம் ஆண்டு மரணமடைந்தார். அதன்பின் சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் இருந்தே அமித்ஷா அதிரடியாக விடுவிக்கப்பட்டார்.
- நீதிபதி லோயா கடந்த 2014ல் டிசம்பர் 1ம் தேதி, திருமண விழா ஒன்றிற்கு சென்ற போது திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு எந்த விதமான கெட்ட பழக்கமும் கிடையாது. 81 வயது தாண்டிய அவரது தந்தையே இப்போதும் உயிரோடு இருக்கிறார். இதனால் அவரது மரணம் இயற்கையானது கிடையாது என்று சந்தேகம் எழுப்பப்பட்டது.
- லோயா இறந்த பின் சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் இருந்தே அமித்ஷா அதிரடியாக விடுவிக்கப்பட்டார். இது இன்னும் பெரிய சந்தேகத்தை உருவாக்கியது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று பலர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார்கள். இவ்வளவு நாட்களாக நடந்து வந்த விசாரணை கடந்த மார்ச் 16ம் தேதி முடிந்தது.
- இந்த விசாரணையின் போதே லோயா மாரடைப்பு காரணமாக மரணம் அடையவில்லை என்று சிபிஐஎல் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தது. இதற்கான ஆதாரம் இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு சாதகமாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜர் ஆகி இருந்தார். லோயாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல உண்மையான விஷயங்கள் மறைக்கப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டது.
- அதேபோல் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அவரது உடற்கூறு அறிக்கையும் வெளியானது. அதன்படி அவருக்கு பின் தலையில் அடிப்பட்டு இருந்ததை மருத்துவர் வேண்டுமென்றே மறைத்துவிட்டார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வழக்கில் இது இன்னும் பெரிய பூதாகாரத்தை உருவாக்கியது.
- அதே சமயம் இந்த வழக்கில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி இதற்காக குடியரசுத்தலைவரிடம் மனு அளித்தார். ஆனால் மஹாராஷ்டிரா அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமிஷ் ஷாவிற்கு எதிராக வேண்டும் என்றே விசாரணை செய்ய கூறுகிறார்கள் என்று கூறியுள்ளனர்.
- இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில் நீதிவிசாரணை குறித்த தகவல்களும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அமித் ஷா சிக்கி இருக்கும் வழக்கு என்பதாலும், இந்தியாவை அதிரவைத்த நிகழ்வு என்பதாலும் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த நிலையில் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பில், லோயா மரணம் இயற்கையானது என்று கூறப்பட்டுள்ளது. அவரது மரணம் குறித்து நீதிவிசாரணை எதுவும் செய்ய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். நீதிவிசாரணை கோருவது, நீதிமன்ற மாண்பை குலைப்பது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இப்போது நடக்கும் நீதிமன்ற விசாரணையே இதில் தொடரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.