ஹைகோர்ட் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் ஒதுக்கப்பட்ட சீட் வரிசை.. நீதிபதி ரமேஷ் அதிருப்தி
சென்னை: சென்னை ஹைகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜி, உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணியை நியமித்து கொலீஜியம் பரிந்துரைத்தது.
இதன்படி தலைமை நீதிபதி தஹில் ரமணியின் பதவியேற்பு சென்னை ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் நீதிபதிகளுக்கு உரிய வகையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது.
தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், நீதிபதிகளுக்கு உரிய இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக, ஹைகோர்ட் சிட்டிங் நீதிபதிகள் கருத்து பரிமாறிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள whatsapp குரூப்பில் தனது அதிருப்தியை அவர் பதிவு செய்துள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மதுரையிலும் சம்பவம்
இதுபோல நடப்பது முதல் முறை இல்லை என்றும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவின்போதும், இவ்வாறு அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு பின்னால் நீதிபதிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரமேஷ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது அரசு நிகழ்வு என்பதால் அரசு முறைப்படி படிநிலை (புரோட்டோகால்) பின்பற்ற பட்டிருக்க வேண்டும் என்று ரமேஷ் தெரிவித்துள்ளார்.
போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னுரிமை
தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு, நீதிபதிகளுக்கு முன்பாக இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. உதாரணத்துக்கு ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் மேடையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அடுத்ததாக அமர்ந்திருந்தார். ராஜகோபாலுக்கு நெருக்கமான டிஜிபி மட்டத்திலான போலீஸ் அதிகாரி ஜாக்கிட்டுக்கு நீதிபதிகளுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆளுநர் மாளிகை ஏற்பாடு
இதுகுறித்து ராஜகோபால் கூறுகையில், நீதிபதியின் புகார் குறித்து நான் அறிந்திருக்கவில்லை, பின்னர் பதில் சொல்கிறேன் என்று தெரிவித்தார். இதுகுறித்து அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், கூறுகையில் விழா ஏற்பாடுகளை மாநில அரசு மேற்கொள்ளவில்லை. ஆளுநர் மாளிகை தான் செய்தது. வழக்கமாக நீதிபதிகள் அனைவருக்கும் ஒருபுறமாகவும், அமைச்சர்களுக்கு, மறுபக்கமும் சீட் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.
கூட்டம் அதிகம்
தலைமை நீதிபதியின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் இருந்து நிறைய சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்ததால், கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன் விளைவாக குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்றார். சுமார் 30 நீதிபதிகள் மகாராஷ்டிராவில் இருந்து வந்திருந்ததாகவும், தலைமை நீதிபதியின் உறவினர்களும் வந்திருந்ததாகவும், பொதுவாக அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது வழக்கம் என்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.