விசாரணை 2 மாதத்தில் முடிக்கப்படும்... 11 மாடிக் கட்டிட விபத்து இடத்தை நேரில் ஆய்வு செய்த நீதிபதி ரகு
சென்னை: கட்டிடத் தொழிலாளர்கள் 61 பேரின் உயிரைக் குடித்த சென்னை 11 மாடிக் கட்டிட விபத்து நடந்த இடத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் இடியுடன் பெய்த கனமழையில், போரூர் மவுலிவாக்கம் அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய கட்டிட விபத்து எனக் கூறப்படும் இந்த விபத்து தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று நீதிபதி ரகுபதி பார்வையிட்டு வருகிறார். மேலும், விபத்து குறித்து இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகில் வசிப்போரிடம் அவர் விசாரணை நடத்தி வருகிறார்.
விசாரணையின் இடையே இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நீதிபதி ரகுபதி கூறியதாவது :-
மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டட விதிமீறல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும். விசாரணையை 2 மாதத்திற்குள் முடித்து அரசிடம் அறிக்கை அளிக்கப்படும். மேலும், கட்டட இடிபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை ஆணையத்தில் முறையிடலாம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.