தர்மபுரி இளவரசன் மரணம்… நீதிபதி முன் திவ்யா ஆஜராகி சாட்சியம்
தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் முன் திவ்யா நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
தர்மபுரி: தர்மபுரி இளவரசன் மர்மான முறையில் ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடத்தார். இது படுகொலை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
தர்மபுரியை அடுத்த நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
இவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது.
பெற்றோரிடம் சாட்சியம்
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நீதிபதி சிங்காரவேலு தர்மபுரி சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இளவரசனின் தந்தை இளங்கோ, தாயார் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர்.
திவ்யா சாட்சியம்
இளவரசனை காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்து சென்ற திவ்யா நீதிபதி முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவருடன் திவ்யாவின் தாயார் தேன்மொழி மற்றும் பாமக என எட்டு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதுவரை 79 பேரிடம்..
இது தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரமுகர்கள் மற்றும் சிலரிடம் நீதிபதி விசாரணை நடத்தி சாட்சியத்தை பதிவு செய்தார். இதுவரை 79 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
தொடரும் விசாரணை
இந்நிலையில், மீண்டும் ஒருமுறை நீதிபதி சிங்காரவேலு தர்மபுரி வந்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இளவரசன், திவ்யா காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் பாமக தலையிட்டு அவர்களை வலுக்கட்டாயமாக பிரித்துச் சென்ற பின்னர் இளவரசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.