தருமபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரணை.. நீதிபதி சிங்காரவேலர் அறிக்கை தாக்கல்
தருமபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சிங்காரவேலர் விசாரணை அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தார்.
சென்னை: தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலர் தலைமையிலான விசாரணைக் குழு இன்று தனது அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தாக்கல் செய்துள்ளனர்.
தருமபுரி தலித் இளைஞர் இளவரசன் - திவ்யா காதல் விவகாரம் 2012 ஆம் ஆண்டு தமிழ்நாட்டையே பரபரப்பாக்கியது.
திவ்யாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவருடைய தந்தை தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, வன்னியர்கள் திரளாகத் திரண்டு நாயக்கன் கொட்டாய், அண்ணா நகர், நத்தம் ஆகிய மூன்று தலித் கிராமங்களை சூரையாடினார்கள்.
இதன் பிறகு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், இளவரசனும் - திவ்யாவும் பிரிக்கப்பட்டார்கள். 2013 ஆம் ஆண்டில் இளவரசன் மர்மமான முறையில் தலையில் அடிப்பட்டு ரயில்வே தண்டவாளம் அருகில் உயிரிழந்து கிடந்தார். இது கொலை என்றும் தற்கொலை என்றும் இரண்டுவிதமாகக் கூறப்பட்டது. இளவரசனின் தந்தை தனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு இளவரசன் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இளவரசன் மரணம் தொடர்பாக, நீதிபதி சிங்காரவேலர் தலைமையிலான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில் என்ன விஷயம் இடம்பெற்றுள்ளது என்பது இன்னும் வெளியாகவில்லை.