சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விரைவில் பதவியேற்கிறார் தஹில் ரமணி!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹில்ரமணியை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹில்ரமணியை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திரா பானர்ஜி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது தமிழக ஆளுநராக வித்யாசாகர் ராவ், இந்திரா பானர்ஜிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த இந்திரா பானர்ஜியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் பரிந்துரைத்தது.
இதையடுத்து, அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணி நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வி.கே.தஹில்ரமணியை நியமிக்கவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
மும்பை உயர் நீதிமன்றத்தில் இருந்து பதவி உயர்வுடன் சென்னைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார்.