சென்னை கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களிடையே மீண்டும் மோதல்: 4 பேர் காயம்
சென்னை: சென்னை புரசைவாக்கம் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரனை நடந்து வருகிறது.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் அரசினர் கூர்நோக்கு இல்லம் என்ற சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 18 வயதுக்குக் கீழ் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்படுகின்றனர். 75-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இந்த இல்லத்தில் நேற்று மாலை இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இருப்பினும் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர்.இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
மோதல் நடைபெற்ற இடத்தில் சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் லால்வீனா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மோதலில் தொடர்புடைய 6 சிறுவர்கள் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு மாற்றப்பட்டனர். கடந்த மாதம் இதேபோல் இங்கு நடந்த மோதலில் 32 சிறுவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.