இயக்குநர் கே. பாலசந்தரின் வெண்கல சிலை திறப்பு... கமல் பங்கேற்கவில்லை
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் பிறந்தநாளையொட்டி இன்று அவரது வெண்கல சிலை திறக்கப்படவுள்ளது.
நன்னிலம்: இயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்தநாளான இன்று அவரது திருவுருவச் சிலை அவர் பிறந்த ஊரான நல்லமாங்குடியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதாக இருந்த கமல் பங்கேற்கவில்லை.
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் ஜூலை 9-ஆம் தேதி 1930-ஆம் ஆண்டு பிறந்தவர் கே.பாலசந்தர். இவர் எம்ஜிஆரின் தெய்வத்தாய் என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் வசனகர்த்தாவாக அறிமுகமானார்.
பின்னர் 1965-இல் நாகேஷ் கதாநாயகனாக நடித்த நீர்க் குமிழி என்ற படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். அதைத் தொடர்ந்து சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம், அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட படங்கள் அவருக்கு ஹிட்டை கொடுத்தன.
எம்ஜிஆர் - சிவாஜி போன்றவர்கள் காலத்தில் அவர்களின் பாணியை விட்டு விலகி, பாலசந்தரின் திரைப்படங்கள் யதார்த்தமான நடுத்தர மக்களின் பிரச்சினைகளைப் பேசின.
கருப்பு வெள்ளை காலத்திலும் முக்கியமான கதாபாத்திரங்களை வலுவாகப் படைத்த பாலசந்தரின் படைப்புத்திறன் அஃறிணைகள் மூலம் மனிதனால் பேச முடியாத விஷயங்களை பேசவும் பாடவும் முற்பட்டது. ரஜினிகாந்த் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர் கேபி. கமல், ரஜினி, உள்பட ஏராளமான நட்சத்திரங்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்தவர் பாலசந்தர்.
வேலைக்குப் போகும் பெண்கள், இருதாரப் பிரச்சினைகள், முறைதவறும் உறவுகள், சமூக புறக்கணிப்புகள், போராட்டங்கள், அரசியல், உள்பட அனைத்தையும் அவரது கதைகள் அலசப்பட்டு வெற்றியும் பெற்றன.
இயக்குநர் சிகரம் என்று போற்றப்படும் கே.பாலசந்தர் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி மறைந்தார். இந்நிலையில் அவரது பிறந்த நாளான இன்று அவரது சொந்த ஊரில் அவருக்கு சிலை திறக்க கவிஞர் வைரமுத்து முடிவு செய்தார். அதன்படி நல்லமாங்குடியில் இன்று மாலை 6 மணிக்கு பாலசந்தரின் சிலையை கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தார்.
நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் கேபி சிலையை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் பங்கேற்கவில்லை. விழாவில் இயக்குநர்கள் மணி ரத்னம், வசந்த், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.