பிரிவினைவாதத்தை முறியடிப்போம், ஒன்றுபடுவோம்.. காதர் மொகிதீன் பக்ரீத் வாழ்த்து!
உலக இஸ்லாமியர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்தியா முழுவதிலும் மதத்தை அடிப்படையாக வைத்து பிரிவினை வாதம் தலையெடுக்கும் நிலையில், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வோடு ஒன்றுபடுவோம் என்று இஸ்லாமியர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் இந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : புனித ஹஜ்ஜு பெருநாள், ஈதுல் அள்ஹா, பக்ரீத் பண்டிகை என்றெல்லாம் அழைக்கப்படும் தியாகத் திருநாளை உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர்.
உருவமற்ற ஒரே இறைவனை வணங்குவதற்கென்று உருவாக்கப்பட்ட உலகின் முதல் பள்ளி வாயிலான கஃபாவை வலம் வருவதிலும், அரஃபா பெருவெளியில் லட்சோப லட்சம் ஹாஜிகள் இறை தியானத்தில் ஈடுபடுவதும், புனித ஹஜ் கடமையின் அங்கங்களாகும். இந்நாளில் உயிரோட்டமாக உள்ள அம்சம் தியாகம் ஆகும்.
இறைவனை நம்புவதும் - அவனை வணங்குவதும் - அவனுக்காக எந்த தியாகத்தையும் செய்வதும் முழுமை அடைந்திருக்கும் இறை நம்பிக்கையின் அடையாளமாகும். மனிதனை கெடுக்கும் பேராசை, பொறாமை, அகங்காரம், ஆணவம், பகைமை போன்ற பாவக் கறைகளை விட்டு மனித இதயத்தை பரிசுத்தப்படுத்துவதற்கு பெயர்தான் குர்பானீ.
வன்முறை பெருகி, வரம்புகளற்ற வாழ்க்கையால் விளையும் சமூக கேடுகளை புறந்தள்ளி, மானிடநேய மாண்புக்குரிய மரபுகளையும், நல்லிணக்க கடமைகளையும் நிலை நிறுத்துவதற்கு தியாகம் செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். இன்றைய தமிழகத்திலும், இந்தியா முழுவதிலும் மதத்தை அடிப்படையாக வைத்து பிரிவினை வாதம் தலையெடுக்கும் சூழ்நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வோடு இதயங்களால் இணைந்து வாழ்வதே இன்றைய தேவையாகும். ஒன்றுபடுவோம்; நாடு உயர பாடுபடுவோம், என்று கூறியுள்ளார்.