ராமஜெயத்தை கொன்றது யார்? ஏன்? - 5 ஆண்டாக நீடிக்கும் மர்மம் - கடந்து போகும் நினைவு நாட்கள்
கே.என் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த பின்னரும் கொலையாளி யார் என்பதில் மர்மம் நீடிக்கிறது. 5வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகளைக் கடந்து விட்டது. ஆண்டுகள் பல கடந்தும் கொலையாளி யார் என்றோ, கொலைக்கான காரணத்தையே இன்னமும் சிபிசிஐடி போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ராமஜெயம் மரணமடைந்த 5ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. திருச்சியில் ராமஜெயம் சிலைக்கு அவரது அண்ணன் கே. என். மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
ராமஜெயம் கொலை
கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி அதிகாலையில் வாக்கிங் சென்ற ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். சில மணி நேரங்களில் திருச்சி திருவளர்ச்சோலை அருகே அவரது உடல் புதரில் கண்டெடுக்கப்பட்டது. கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார் ராமஜெயம். இந்த கொலை வழக்கு முதலில் மாநகர போலீசார் விசாரித்தனர். அடுத்து சிபிசிஐடி.க்கு மாற்றப்பட்டது.
சிபிஐ விசாரணை தேவை
ராமஜெயம் கொல்லப்பட்டு 5ஆண்டுகள் ஆகிவிட்டன. குற்றவாளியின் நிழலைக்கூட சிபிசிஐடி போலீசாரினால் நெருங்க முடியவில்லை. கொலை வழக்கில் எந்த முன்னேற்றம் இல்லாத நிலையில், ராமஜெயத்தின் மனைவி லதா சிபிஐ விசாரணை கோரி கொலையான, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதனையும் சிபிசிஐடி போலீசார் இழுத்தடித்து வருகின்றனர்.
சிபிசிஐடி இழுத்தடிப்பு
இம்மனு மீது விசாரணை நடைபெறும்போது, குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி போலீசார் தொடர்ச்சியாக கால அவகாசம் பெற்று வருகின்றனர். கடந்த ஜனவரி19ஆம் தேதி கடைசியாக விசாரணை நடைபெற்றது. அப்போது, 11-வது விசாரணை அறிக் கையை தாக்கல் செய்த சிபிசிஐடி போலீசார், குற்றவாளியை கைது செய்ய தங்களுக்கு மேலும் 3 மாதம் கால அவகாசம் கேட்டனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோகுல்ராஜ், வரும் ஏப்ரல்19ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
5ஆம் ஆண்டு நினைவு தினம்
ராமஜெயம் கொலை வழக்கு மிகப்பெரிய மர்ம வழக்காகவே தமிழக போலீஸாரைப் பொறுத்தவைரையில் இருக்கிறது. ராமஜெயத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி முழுக்க அவரது ஆதரவாளர்கள். ஏராளமான போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இத்தனை ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ராமஜெயம் குடும்பத்தினரிடமும், திமுகவினரிடமும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
கே.என். நேரு கண்ணீர் அஞ்சலி
ராமஜெயத்தின் அண்ணன் கே.என்.நேரு கேர் கல்லூரியில் உள்ள ராமஜெயத்தின் சிலைக்கு 5ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஏராளமான தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். திருச்சி மாவட்டடத்தில் உள்ள சமூக சேவை மையங்களிலும் 3 வேளையும் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்கள்.
8 நீதிபதிகள் மாற்றம்
வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு இதுவரை 8 நீதிபதிகளை சந்தித்துள்ளது. ஒவ்வொரு முறையும் சிபிசிஐடி போலீசார் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கால அவகாசம் வாங்கி வருகின்றனர். ரகசிய அறிக்கை என்ற பெயரில் இழுத்தடிப்பு செய்கின்றனர். உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்யும் பட்சத்தில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் ராமஜெயம் குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.
ரங்கநாதருக்கே வெளிச்சம்
ராமஜெயத்தை ஏன் கொலைசெய்தார்கள்? கொலையாளிகள் யார் என்பது பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஆனால் சிபிசிஐடி போலீசார் கொலையாளிகளை நெருங்கி விட்டதாக கூறி அவகாசத்திற்கு மேல் அவகாசமாக கேட்டு வருகின்றனர். ராமஜெயத்தை கொன்றது யார் என்பது அந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கே வெளிச்சம்.