சசிகலாவின் உண்மையான விசுவாசி தான் தம்பிதுரை.. கே.பி.முனுசாமி ஆவேசம்!
சசிகலாவின் விசுவாசியாக தம்பித்துரை செயல்படுகிறார் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
தர்மபுரி: ஜெயலலிதா மேல் விசுவாசம் உள்ளவர் போல் காட்டிக் கொள்ளும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சசிகலாவுக்கு தான் உண்மையான விசுவாசியாக உள்ளார் என்று முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ். ஆதரவாளருமான கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
தர்மபுரி காரிமங்கலத்தில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவின் சட்டத் திட்டங்கள் அனைத்தும் தெரிந்து இருந்தும் தம்பித்துரை உண்மையை மறைத்து சசிகலாவுக்கு விசுவாசமாக செயல்படுகிறார். ஜெயலலிதா மேல் விசுவாசம் உள்ளவர் போல் காட்டிக் கொண்டாலும், அவர் சசிகலாவுக்கு தான் உண்மையான விசுவாசியாக உள்ளார். சசிகலா மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் உள்ள விசுவாசத்தால் அ.தி.மு.க.வின் சட்டத் திட்டங்களை திருத்தி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர்.
சசிகலாவை தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர் என்று தம்பித்துரை அடிக்கடி கூறி வருகிறார். அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் முழு உரிமையும் அடிப்படை தொண்டனுக்கு மட்டும் தான் உள்ளது என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் கூறி உள்ளனர். அந்த உண்மை நிலையை மறைத்து சுயநலத்திற்காக அவர்களாகவே அறிவித்தது தான் சசிகலா நியமனம்.
சசிகலாவும், அவரது குடும்பமும் முழுமையாக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். சசிகலா மூலம் முதல்வரானவர் தான் எடப்பாடி பழனிசாமி. அவரை எங்களால் முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியாது.
ஓ.பி.எஸ். தலைமையில் ஆட்சி தொடரவேண்டும் என்று மக்களும், தொண்டர்களும் விரும்புகின்றனர். சசிகலா மூலம் முதல்- அமைச்சர் ஆனவர் தான் எடப்பாடி பழனிசாமி. அவரை நாங்கள் முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.