சசிகலாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை... கே.பி. முனுசாமி
சசிகலாவை ஒரு பொருட்டாகவே நாங்கள் மதிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
டெல்லி: சசிகலாவை ஒரு பொருட்டாகவே நாங்கள் மதிக்கவில்லை என்றும் தினகரன் ஒரு ஏமாற்றும் பேர் வழி என்றும் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
இது குறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடையே மேலும் கூறுகையில், தினகரன் ஒரு ஏமாற்று பேர்வழி.
ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் தினகரன் இரட்டை இலைக்கு உரிமை கோருவது கேலிக் கூத்தாக உள்ளது.
நாங்கள் தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள ஆவணங்கள் உண்மையானவை. தினகரன் சமூக குற்றம் செய்து சிறை சென்றவர். ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மனக்கசப்பே இல்லை.
அனைத்து கோப்புகளும் செயல்திட்டங்களும் துணை முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்ட பிறகே அமல்படுத்தப்படுகிறது.
அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என்று கூறிய தினகரனை இந்த அணியில் இணையுமாறு தம்பிதுரை அழைப்பு விடுத்திருக்கக் கூடாது. மாறாக அவ்வாறு கூறியதற்கு தினகரனை கண்டித்திருக்க வேண்டும்.
சசிகலா குடும்பத்துடன் தம்பிதுரை நீண்ட கால உறவு கொண்டுள்ளதால் அவரால் வெளிப்படையாக எதையும் பேச முடியவில்லை. முதல்வர், துணை முதல்வர் இடையே மனக்கசப்பா என்று கேட்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்றார் கே.பி.முனுசாமி.