தலித் பற்றி அவதூறு: எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு!
மதுரை: தலித்துகள் பற்றி அவதூறாக பேட்டி அளித்த வழக்கில் சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கி.ரா என்கிற ராஜநாராயணன் நேரில் ஆஜராக மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவின்பேரில் அவர் மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், வார பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த, எழுத்தாளர் ராஜநாராயணன், வட்டார மொழி சம்பந்தமாக அதிகம் எழுதியது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், உழைப்பாளர்கள் மற்றும் அடிதட்டு மக்கள், பட்டியல் இனத்தவர்கள் குறித்து எதுவும் எழுதவில்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள ராஜநாராயணன், அடித்தட்டு மக்களின் நிலை குறித்து அதிகம் எழுதியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஆனால், தலித் மக்களை பற்றி எழுதாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ராஜநாராயணன், அவர்கள் வரலாறை அவர்கள் எழுதுவார்கள். அவர்கள் பேசும் மொழி பல்வேறு விதமாக இருக்கிறது. அந்த மொழி குறித்து எனக்கு எழுத தெரியாது.
பசுவுக்கும், எருமைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு என்று இழிவாக பேட்டி அளித்துள்ள அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவின்பேரில் அவர் மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்டோபர் 11ஆம் தேதி எழுத்தாளர் ராஜநாராயணன் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.