மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித அரசியல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது!
சென்னை: குணா படத்தில் ஒரு பாட்டு வரும்.. அந்தப் பாட்டுதான் நினைவுக்கு வருகிறது கி.வீரலட்சுமி ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியைப் பார்க்கும்போது.
உண்மையில் கி. வீரலட்சுமி பேஸ்புக் நிறுவனருக்கு கோவில் கட்டி தினசரி அதை லைக் செய்து கும்பிட வேண்டும். காரணம், பேஸ்புக் மூலமாகவே வளர்ந்த "தலைவர்" அவர். அவரது முகத்தையும், அவரது அமைப்பு குறித்தும் பேஸ்புக் மூலமாக கேள்விப்பட்டுத்தான் வைகோவே கூட அவரை மக்கள் நலக் கூட்டணிக்கு அழைத்திருக்கக் கூடும்.
ஆனால் அப்படிப்பட்ட வைகோவை இன்று தூக்கி எறிந்து விட்டார் கி.வீரலட்சுமி. படு துணிச்சலாக பல கருத்துக்களையும் அவர் எடுத்து வைத்துள்ளார். அதுதான் இங்கே குறிப்பிட்டு பேசப்பட வேண்டியதாகியுள்ளது. கி.வீரலட்சுமி மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகும் முடிவை எடுத்த நிலையில் சில பல கருத்துக்களை விகடனுக்கு அளித்துள்ளார்.. அதிலிருந்து சில..
- வைகோவின் கொள்கை முரண்பாட்டைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள இவ்வளவு நாட்கள் தேவைப்பட்டன.
- மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவராகத்தான் நானும் இருந்தேன்.
- ஏதோ ஒரு கட்சியின் மாவட்ட, மாநில செயலாளராக நான் இல்லை.
- ஒரு அமைப்பை வழிநடத்தக் கூடிய தலைமைப் பொறுப்பில் உள்ள பொண்ணு நான்.
- வட மாவட்டத்தில் உள்ள 120 தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்தால், எளிதில் வெற்றி பெறுவோம் என வைகோ அய்யாவிடம் சொன்னேன்.
- வைகோ என்னுடைய பேச்சையும் கேட்கவில்லை. எந்த மேடையிலும் என்னை முன்னிலைப்படுத்தவும் விரும்பவில்லை.
- அப்படி அறிமுகப்படுத்தினால் அவருடைய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என யோசித்திருக்கலாம்.
- அவருடைய செயல்பாட்டை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
- வருகிற உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கொள்கையோடு உடன்பாடு உள்ள கட்சிக்கு ஆதரவு தெரிவிப்போம்.
- நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம்.
- அகில இந்திய தமிழர் முன்னேற்றக் கட்சி என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். அதன் நிறுவனத் தலைவராக நான் செயல்படுவேன்.
- எங்கக் கட்சியில நிறைய பேர் இருக்காங்க. கண்டிப்பாக எங்களால போட்டியிட முடியும்.
- சட்டசபைத் தேர்தலில் 38 இடங்களில் போட்டியிடுவதற்காக ஆட்களைத் தேர்வு செய்து வைத்திருந்தேன்.
- வைகோ அய்யா என்னிடம், நீங்கள் மட்டும் நில்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றதால்தான் பல்லாவரத்தில் போட்டியிட்டேன்.
- தனித்துப் போட்டியிட்டு மக்கள் நலக் கூட்டணிக்கு வரக் கூடிய ஓட்டுக்கள் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காகக் கூட்டணியில் இணைந்தோம்.
- எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பலத்தைக் காட்ட வேண்டும் என பொறுப்பாளர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.
- பல்லாவரம் தொகுதியில் தேர்தல் செலவுக்காக 20 லட்ச ரூபாயை வைகோ அய்யா கொடுத்தார். அதையும் அவர் கட்சியின் மாவட்ட செயலாளரிடம் கொடுத்துவிட்டேன்.
- எவ்வளவு ரூபாயைச் செலவழித்தார்கள் என்றுகூட தெரியாது. என் பங்குக்கு 7 லட்ச ரூபாயைச் செலவு செய்தேன். அதனால், எம்.பி தேர்தலுக்கு தேவையான நிதியை சேகரித்து வருகிறோம்.
- வைகோ மீது எனக்குத் துளியளவும் கோபம் இல்லை. தமிழ்நாட்டின் முதிர்ந்த அரசியல்வாதி அவர்.
- எங்களுடைய பயணம் வேறு. அவருடைய பயணம் வேறு. தமிழர் நலனுக்கான என்னுடைய போராட்டம் என்றுமே வீரியமாக இருக்கும்.