காற்றை விதைத்து புயலை அறுவடை செய்திருக்கிறார் எச். ராஜா... கி. வீரமணி பதில்!
எச். ராஜா காற்றை விதைத்து புயலை அறுவடை செய்திருக்கிறார் எதிர்காலத்திலாவது இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கி. வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
Recommended Video
சென்னை : பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற கருத்தை கூறியதன் மூலம் காற்றை விதைத்து புயலை அறுவடை செய்திருக்கிறார் எதிர்காலத்திலாவது இது போன்ற பண்பாடற்ற, அரசியல் நாகரீகமில்லாத செயல்களில் அவர் ஈடுபட வேண்டாம் என்று கி. வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று சர்ச்சை பதிவை போட்டு தமிழகத்தை கலவரமாக்கினார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா. எச். ராஜாவின் இந்த கருத்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் எச். ராஜா முகநூலில் இருந்து தன்னுடைய பதிவை நீக்கினார். எனினும் எச். ராஜா விதைத்த வார்த்தைகளால் நேற்று இரவு வேலூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. எச். ராஜாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது கொடும்பாவி எரிப்பு, போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முகநூலில் போட்ட பதிவிற்கும் தனக்கும் தொடர்பு இல்லை, முகநூல் அட்மின் தனக்கு தெரியாமல் இந்த கருத்தை பதிந்துவிட்டதாக புதிய விளக்கத்தை எச். ராஜா இன்று அளித்துள்ளார்.
விளக்கம் நம்பும்படியாக இல்லை
எச். ராஜாவின் இந்த விளக்கம் குறித்து பதில் அளித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியதாவது : ராஜா கூறும் விளக்கம் வேடிக்கையான, விந்தையான நம்ப முடியாத விளக்கமாக இருக்கிறது. இருந்தாலும் மன்னிப்பு சொல்லி இருக்கிறார்.
கருத்தை ஏற்க துணிவில்லை
தந்தை பெரியார் அடிக்கடி ஒரு கருத்தை சொல்வார், யாராவது ஒரு கருத்தை சொல்லி அதை அவர்கள் மறுத்து பின்வாங்கினால் இல்லைஇல்லை என்று அவர்களை வற்புறுத்த தேவையில்லை. அவர்கள் சொன்ன கருத்தை ஏற்க துணிவு இல்லாதவர்கள் என்கிற போது மன்னிப்பை ஏற்றுக் கொள்வது தான் நம்முடைய பண்பாடு என்று பெரியார் சொல்வார்.
டெல்லி வரை அதிர்வு
அதன்படியே காற்றை விதைத்து புயலை அறுவடை செய்திருக்கிறார் ராஜா. அதனுடைய விளைவு எந்த அளவிற்கு வந்திருக்கிறதென்றால் டெல்லியில் வரை அதிர்ந்திருக்கிறது.
அரசியல் நாகரிமற்ற சொற்கள்
மத்திய அரசு சிலைகளையெல்லாம் மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர். இனிமேலாவது பண்பாடற்ற அரசியல் நாகரீகமற்ற சொற்களை எச். ராஜா பயன்படுத்தக் கூடாது. தந்தை பெரியாரை இனி ராஜா ஈவெரா என்று எழுதக் கூடாது. ஏனெனில் காஞ்சி சங்கராச்சாரியாரை கன்னடர் என்று நாங்கள் சொன்னால் இவர் ஏற்றுக்கொள்வாரா என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வீரமணி கூறியுள்ளார்.