"கேப்டனுக்கு" கி.வீரமணியின் அன்பான வேண்டுகோள்!
சென்னை: உங்களை சட்டமன்றத்திற்குள்ளேயும் வெளியும் பல வழிகளில் ஆத்திரமூட்டுவார்கள் பலர். அதற்குப் ஆட்பட்டு விட்டால், அது உங்களின் அரிய பணியின் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி மறைத்து விடும். எனவே, எதிரிகள் வெட்டும் குழியில் விழாமல் எச்சரிக்கையாய் செயல்பட்டு இலக்கை அடைய இது போன்ற கூட்டு முயற்சிகள் எப்போது எல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அதில் தயங்காமல் ஈடுபடுங்கள். தங்கள் பணி காலத்தால் செய்யப்பட்ட பணி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், முயற்சி எடுத்து சில தமிழ்நாட்டு மக்கள் நலன், மற்றும் மனித உரிமைகள் பற்றிய பிரச்சினையில், மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு சார்பாக நம் உரிமைகளை வற்புறுத் திட, அரசியல் கட்சித் தலைவர்களை அவரவர்களின் அலுவலகம் (வீடு) முதலியவைகளில் நேரில் சென்று சந்தித்து, மேகதாது அணை கட்டுதல் போன்ற பல்வேறு முக்கிய தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமான முயற்சிகளை கருநாடக மாநிலம் கைவிட வேண்டும் - மக்களின் வாழ் வாதாரம் (மீனவ மக்கள்) உட்பட என்பதை வலியுறுத்து வதற்கு பிரதமரை நேரில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.
இது ஒரு ஆக்கப்பூர்வமான நல்ல எடுத்துக்காட்டான செயல்பாடு!
பல்வேறு கட்சிகள், கொள்கைகளால் மாறுபடும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் அவ ருடன் சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க. உட்பட அதில் கலந்து கொண்டு, சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒத்துழைத்ததும் வரவேற்க வேண்டிய ஒரு நல்ல முன் மாதிரியான எடுத்துக்காட்டு ஆகும்!
கருநாடகத்தில் முன்னாள் இந்நாள் முதல் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் ஓர் அணியில் - ஓர் குரலில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக் கூடாது; அனுமதி இல்லா மலேயே மேகதாது அணை கட்டுவோம் என்று ஒன்று சேரும்போது - தமிழ்நாட்டு (அ.தி.மு.க.) ஆளுங் கட்சி ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து, பொதுப் பிரச்சினைகளை வலியுறுத்திடுவதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறை என்று நம்மைப் போன்ற பலரும் பலமுறை தமிழக அரசுக்கு, முன்னாள், இந்நாள் முதல் அமைச்சர் களுக்குச் சுட்டிக் காட்டிய போது, அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே சென்றது.
எதற்கும்தானே தான் என்ற பெருமையை ஏகபோகமாக அனுபவிக்க வேண்டும் என்ற பிடிவாத பேராசை காரணமாக, ஆளுங் கட்சி செய்யத் தவறியதை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்கள் செய்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு என்பது ஜனநாயகத்தில் அவருடைய கட்சிக்கு மட்டுமல்லாமல், சட்டமன்றத் தில்கூட மற்ற அனைத்துக் கட்சிகளின் உரிமைக் குரலாய் செயல்பட வேண்டும் என்பதே ஜனநாயக அரிச்சுவடி (இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்ற மரபும் வழியும் தத்துவமும் ஆகும்).
இவரால் தூதுக்குழுவில் தயங்காமல் இடம் பெற்றுள்ள தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், த.மா.க., புதிய தமிழகம், அய்.ஜே.கே., புதிய நீதிக்கட்சி போன்றவைகளோடு பா.ஜ.க. கூட்டணியில் தற்போது உள்ள சில கட்சிகளும் (பத்து கட்சிகள்) கூட கலந்து கொண்டுள்ளனர்.
பா.ஜ.க.வினர்தான் இந்த ஏற்பாட்டுக்குப் பின்புலமாக உள்ளனர் என்று ஒரு செய்தி வந்துள்ளது.
அப்படியே அது உண்மையாகவே இருந்தாலும் தமிழ்நாட்டு உரிமைப் பிரச்சினைப் பாதுகாப்பில் அனைவரும் ஒன்று சேர்வதோ, முயற்சிப்பதோ, ஆதரவு தருவதோ வரவேற்கத்தக்கதே தவிர, அதில் அரசியல் கொள்கைப் பார்வை நமக்குள் தேவை இல்லை என்பது திராவிடர் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு ஆகும்!
அந்தக் கடமையை சற்று காலத் தாழ்ந்து செய்துள்ள கேப்டன் திரு. விஜயகாந்த் Better Late than Never என்று ஒரு ஆங்கிலப் பழமொழியின் காலம் தாழ்ந்தாலும் பரவாயில்லை, சரியான முயற்சிதான்.
அவருக்கு நமது அன்பான வேண்டுகோள்.
உங்களை சட்டமன்றத்திற்குள்ளேயும் வெளியும் பல வழிகளில் ஆத்திரமூட்டுவார்கள் பலர். அதற்குப் ஆட்பட்டு விட்டால், அது உங்களின் அரிய பணியின் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி மறைத்து விடும். எனவே, எதிரிகள் வெட்டும் குழியில் விழாமல் எச்சரிக்கையாய் செயல்பட்டு இலக்கை அடைய இது போன்ற கூட்டு முயற்சிகள் எப்போது எல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அதில் தயங்காமல் ஈடுபடுங்கள். தங்கள் பணி காலத்தால் செய்யப்பட்ட பணி.
ஆளுங்கட்சி செய்யத் தவறியதை எதிர்க்கட்சித் தலைவர் செய்தார் என்ற பெருமை உங்களுக்கு ஏற்படும்; அன்பான வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளார்.