நடிகையுடன் நித்யானந்தா உல்லாசமாக இருந்த வீடியோ உண்மை என்பது நிரூபணம்.. நடவடிக்கைக்கு வீரமணி கோரிக்கை
Recommended Video
சென்னை: திரைப்பட நடிகை ஒருவருடன் இந்த நித்யானந்தா உல்லாசமாக இருப்பதுபோல ஏழு ஆண்டுகளுக்குமுன் வெளியான 'வீடியோ' உண்மையானதுதான் என டெல்லி தடயவியல் ஆய்வின்மூலம் தெரிய வந்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை பாய வேண்டும் என கி. வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை: திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா என்ற ஒருவர் வேலையற்றுத் திரிந்த இளைஞன். சாமியார் 'பிசினஸ்'தான் முதலில்லா வியாபாரம் என்று புரிந்துகொண்டு, காவி வேடம் போட்டு, மிகப்பெரிய மடாதிபதிபோல் தன்னைக் காட்டிக்கொண்டார்.
இதன் மூலம், பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து, தன்னுடன் ஒரு ரவுடிக் கும்பல், அடியாட்களை வைத்துக்கொண்டு தனது சாம்ராஜ்ஜியத்தை சல்லாப ராஜ்ஜியமாக்கிக் கொண்டு சொகுசு வாழ்வு வாழ்வதுபற்றி ஏடுகள் பல செய்திகளை வெளியிட்டன.
பெண்களுக்கு மூளை சாயம்
குடும்பத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மூளைச்சாயம் ஏற்றி, அழைத்து வருவது, அங்கே ‘ஆன்மீகம்‘ என்ற பெயரால் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவது வேடிக்கையான வாடிக்கையாகும். இப்படிப்பட்ட நவீன சாமியார்கள் மின்னணு யுகத்தில் வாழ்வதால், அத்தனை மின்னணு (Electronic Gadgets) கருவிகளையும் தங்களை விளம்பரப்படுத்திட புது வகை டெக்னிக்குகளைக் கையாண்டு, அறியாமையிலும், பக்தி போதையிலும் உழலும் பல பெண்களின் வாழ்வை நாசமாக்கும் சமூக விரோத செயல்களைத் தங்கு தடையின்றி நடத்தி, சுகபோக வாழ்வு வாழ்கின்றனர்!
உண்மையான வீடியோ
திரைப்பட நடிகை ஒருவருடன் இந்த நித்யானந்தா உல்லாசமாக இருப்பதுபோல ஏழு ஆண்டுகளுக்குமுன் வெளியான ‘வீடியோ' உண்மையானதுதான் என
டெல்லி தடயவியல் ஆய்வின்மூலம் தெரிய வந்துள்ளது! இதையடுத்து அந்த நித்யானந்தா தலைமறைவானார். பிறகு திருவண்ணாமலை அருகே கருநாடகக் காவல்துறை கைது செய்து வழக்குப் போட்டது. மக்களும், முற்போக்கு அமைப்புகளும் இந்த காஷாய சாமியார் வேடமணிந்த நபருக்கு எதிராக கிளர்ச்சிகளை நடத்திய பின்னரே இவர்மீது வழக்குப் பாய்ந்தது! உச்சநீதிமன்றம்வரை சென்று, இவருக்கு ஆண்மைப் பரிசோதனைகூட நடத்தப்பட்டதுண்டு. ஆண்மை இல்லை என்ற இவரது வாதம் பொய்யானது என்பது உறுதியானது.
நடிகையுடன் சரச லீலை
ஏழு ஆண்டுகளுக்குமுன் நடிகையுடன் சல்லாப சரச லீலையில் ஈடுபட்டதையெல்லாம் - அவரது காரோட்டி லெனின் கருப்பையாமூலமும், வீடியோ மூலமும் வெளியானது. போலி என்ற இவர் தரப்பு வாதம் பொய்யாக்கப்பட்டு, அது உண்மைதான் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இவரையும், இவரது கும்பலையும் உடனே கைது செய்து, சிறையில் அடைப்பதோடு உரிய தண்டனையும் வழங்கப்படவேண்டும். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்மீது நடத்தப்படும் சோதனைபோல, வருமான வரித்துறை இந்த மடாதிபதிகளின் கூடாரங்களிலும் சோதனை நடத்திடவேண்டும். காலிகள், சமூக விரோதிகளுக்கு இந்தக் காவி உடையும், ருத்ராட்ச வேஷமும் சரியான பாதுகாப்புக் கவசங்கள் - ‘ஆன்மீகம்‘ என்ற அர்த்தமற்ற ஒன்றைக் கூறி, அமோக பக்தி வியாபாரம் நடைபெறுகிறது தங்குத் தடையின்றி!
காமரசத்தில் நீந்தினார்
வடக்கே அண்மையில் பிடிபட்ட பஞ்சாப் காவிச் சாமியார் ராம் ரகீம்சிங் பற்றியும், அவரது சாலோக சாரூப, சாம்ராஜ்ஜியம்பற்றியும், தோண்டத் தோண்ட வரும் புதையல்போல பல்வேறு அருவருக்கத்தக்க, அரசுகளும், அரசியல்வாதிகளான அதிகார மய்யங்களும்கூட நெருங்க முடியாத எல்லைக்குச் சென்று, மோசடி வாழ்க்கையை மிகவும் பாதுகாப்பாக நடத்திட, அன்றாடம் காமரசத்தில் நீந்தி, நீந்தி - ‘ஆன்மீகப் பணி செய்யும்‘ இந்த அதிவேக ‘அய்டெக்‘ சினிமா, கிரிக்கெட் சாமியாருக்குக் குண்டு துளைக்காத வீடாம்! எப்படிப் பார்த்தீர்களா?
இவர்களையும் கண்டுகொள்ள வேண்டும்
பாலியல் வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்று சிறையில் உள்ள ராம் ரகீம் சிங் சாமியார் என்ற இந்தக் கயவன் - புல்லட் புரூப் முறையில் கட்டப்பட்ட வீட்டில் வாழ்ந்து வந்ததாக இன்று தகவல் வெளியாகியுள்ளது! அரியானா மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவன் - பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக் குவியல்! இவைகளையெல்லாம் நம் நாட்டு காவல்துறை, சி.பி.அய்., வருமான வரித்துறை கண்டுகொள்ளவேண்டாமா? இவர்களைக் கண்டுகொள்ளாத ‘‘செலக்டிவ் அம்னீஷியா'' ஏன் வரவேண்டும் ஆட்சியாளர்களுக்கு?
மோடியுடன் பிரசாரம்
பிரதமர் மோடியே இவரைப் பயன்படுத்தி வாக்குகள் வாங்கிட தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்தார் என்றெல்லாம் ஊடகங்களில் செய்தி வெளிவந்ததே!
பிறகு அதிகாரிகளோ, வருமான வரித்துறையோ, சி.பி.அய்.யோ சாமியார் என்ற ‘‘ஸ்ரீமான் 420''-அய் நெருங்க முடியுமா? சாமியார்கள் ஒழிந்த நாடு
ஜாதி ஒழிந்த சமூகம் இவைதான் நமது இலக்கு!
மகளீரே வாரீர்
இளைஞர்களே, மகளிர் தோழியர்களே! ஏமாறாமல் இருக்க இப்படிப்பட்டவர்களது கழற்றப்பட்ட காவி முகமூடிகளின் யோக்கியதைகளைப்பற்றி நாடெலாம், உலகெலாம் பாயும் வண்ணம் பிரச்சாரம் செய்யுங்கள்! அரசும், காவல்துறையினரும் இதற்கான ஒரு தனிப் பிரிவையும் உண்டாக்கி, தொடக்கத்திலேயே இதனைத் தடுத்து ஒழித்திட ஆவன செய்யவேண்டும் என்பதை வற்புறுத்துகிறோம். 2018 இல் இந்த முழக்கப் பிரச்சாரம் நம்மால் தீவிரப்படுத்தப்படும்! இவ்வாறு கூறப்பட்டுள்ளது.