யாழ் பல்கலை.மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது ஜனநாயகத்தில் கேள்விப்பட்டிராத கொடுமை: வீரமணி
சென்னை: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் எவ்வித காரணமும் இல்லாமல் இலங்கை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை, எவ்வித காரணமும் இன்றி, இலங்கை காவலர்கள் சுட்டுக் கொன்றுள்ள கொடுமை ஜனநாயகத்தில் கேள்விப்பட்டிராத கொடுமையாகும்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் நடராஜா கஜன், பவுன் ராஜ் சுலக்ஷன் ஆகிய இருவர் மோட்டார் சைக்கிளில்சென்றபோது, நிறுத்தச் சொன்னவுடன் நிறுத்தாமல் சென்றதாகக் கூறி, உடனே இலங்கை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்கள். போர் முடிந்து 7 ஆண்டுகளுக்குமேல் ஆகியும், அரசியல் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்படாமல், கொடுமைக்கு ஆளாவதாகச் சொல்லப்படுகிறது.
சர்வதேச மனித உரிமை ஆணையம் மற்றும் இந்திய அரசு என்ன செய்கிறது? இதுகுறித்து சர்வதேச மனித உரிமை ஆணையம், இந்திய அரசு கவலை கொள்ளவேண்டாமா?
இலங்கையின் பொருளாதார ஒத்துழைப்பு கோரத்தான் நமது இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சென்று பேசுகிறாரே தவிர, அங்குள்ள தமிழர் வாழ உரிமை பற்றியோ, அன்றாடம் அடித்து விரட்டப்படும் தமிழக மீனவர் பிரச்சினைக்கான தீர்வு பற்றியோ பேசப் போயிருப்பதாகத் தெரியவில்லை'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.