மாற்றம் ஏற்படாவிட்டால் உயிரோடு கொளுத்த சொன்ன மோடியால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை: வீரமணி
சென்னை: பண மதிப்பிழப்புக்கு பிறகு 50 நாட்களில் மாற்றம் ஏற்படாவிட்டால் உயிரோடு கொளுத்தச் சொன்ன மோடியால் அதை திறம்பட செய்ய முடியவில்லை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: மறக்க முடியாத நவம்பர் 8 என்ற கருப்பு நாள் இந்நாள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பர் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஓர் அபாய அறிவிப்பினைக் கொடுத்தார். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதுதான் அந்த அபாய அறிவிப்பு!
இதன்மூலம் கருப்புப் பணம் ஒழியும் - நாட்டின் பொருளாதார வளர்ச்சி செழிக்கும் - விலைவாசி குறையும் - மக்கள் எல்லாம் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்றெல்லாம் உரத்தக் குரலில் பேசப்பட்டது. பாமர மக்களும் ஏதோ நம்பினார்கள். நல்லதுக்குத்தான் பிரதமர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று நினைத்ததுண்டு.
போதும் போதாதற்கு 2016 நவம்பர் 13 ஆம் நாள் - பண மதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு 5 ஆம் நாள் கோவாவில் பிரதமர் நரேந்திர மோடி முழங்கியது பலருக்கு மறந்திருக்கலாம்.
மோடி வாக்குறுதி
மக்களே! டிசம்பர் 30 வரை 50 நாள்கள் பொறுத்திருங்கள். அதற்குப் பிறகு என்னுடைய நோக்கத்திலோ, செயல்பாட்டிலோ தவறுகள் இருந்தால் என்னைப் பொது இடத்தில் உயிரோடு கொளுத்துங்கள். மக்களாகிய நீங்கள் விரும்பிய இந்தியாவை உங்களுக்குத் தருகிறேன். யாராவது எனது அறிவிப்பால் இன்னலுக்கு ஆளானால், அந்த வலியை நானும் உணர்கிறேன். இந்த இன்னல்கள் எல்லாம் வெறும் அய்ம்பதே நாள்களுக்குத்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி கோவாவில் முழங்கினாரே நினைவிருக்கிறதா?
மக்களுக்கு கஷ்டம்
அவர் வாக்குறுதி அளித்தபடி மாற்றங்கள் நடந்தனவா? உண்மையைச் சொல்லப்போனால், ஏமாற்றங்கள்தான் விஞ்சின. அன்றாடம் வேலைக்குச் சென்று சம்பாதித்து அடுப்புப் பற்ற வைத்தவர்கள்கூட வங்கிகளின் வாசல்களில் தங்கள் சொந்த பணத்தை எடுப்பதற்கு, தங்கள் வசம் இருந்த பழைய பணத்தை மாற்றிக் கொள்வதற்கு காலை முதல் மாலை வரை கால்கடுக்க நிற்கவில்லையா? 112 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவிடவில்லையா?
வாய் நீளம் காட்டினர்
பிரதமர் சொன்னபடி கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதா? கட்டுப்படுத்தப்பட்டதா? 2016 நவம்பர் 8 ஆம் தேதி நிலவரம் என்ன? 500 ரூபாய், 1000 ரூபாய், நோட்டுகளின் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடி. இதில் 5 லட்சம் கோடி ரூபாய் திரும்பி வராது; அந்த அளவிற்கு நாட்டில் கருப்புப் பணம் நிலவுகிறது. அந்த 5 லட்சம் கோடி ரூபாய் மக்கள் வளர்ச்சிப் பணிக்குப் பயன்படும் என்றெல்லாம் வாய் நீளம் காட்டினார்கள்.
ரிசர்வ் வங்கி
ஆனால், நடந்தது என்ன? ரிசர்வ் வங்கி அறிக்கை என்ன கூறுகிறது? 2017 ஆகஸ்டு மாத இறுதி நிலவரம் - ரூ.15.28 லட்சம் கோடி வரை வங்கி அமைப்புக்குள் வந்துவிட்டது. வெறும் 16,000 கோடி ரூபாய்தான் புழக்கத்தில் வரவில்லை என்று ரிசர்வ் வங்கிக் கூறிவிட்டதே! நியாயமாக பிரதமர் மோடி என்ன சொல்லியிருக்க வேண்டும்? உயிரோடு கொளுத்துவது ஒருபுறம் இருக்கட்டும்! நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை - என் முயற்சி - என் அறிவிப்பு தோல்வி கண்டுவிட்டது என்று ஒப்புக்கொண்டிருக்க வேண்டாமா?
யஷ்வந்த் சின்கா குற்றச்சாட்டு
இதில் என்ன கொடுமை என்றால், 16,000 கோடி ரூபாய் கருப்புப் பணத்துக்காக புதிதாக ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ.21 ஆயிரம் கோடி செலவு செய்யவேண்டி இருந்தது என்பதுதான். எதிர்க்கட்சிகள் அப்படித்தான் குற்றம் சொல்வார்கள் என்று சமாதானம் சொல்ல முடியாது. பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய தலைவர்களே அதுவும், வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா, மத்திய அமைச்சராக இருந்த அருண்ஷோரி போன்றவர்களே பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார்களே!
வசீகர பேச்சு
அந்த வகையில் நவம்பர் 8 ஆம் தேதி என்பது நாட்டு மக்களின் கருப்புத் தினமே! வளர்ச்சி - மாற்றம் என்ற மோடியின் நாடக வசன வசீகரத்திற்கு மயங்கி வாக்களித்து அதிகார பீடத்தில் அமர வைத்தவர்கள், அதே வாக்குச் சீட்டு ஆயுதத்தைப் பயன்படுத்தி வீழ்த்திடவும் தயாராக இருக்க - இந்தக் கருப்புத் தினத்தில் உறுதி கொள்ள வேண்டும் என்று அவர் தநது அறிக்கையில் கூறியுள்ளார்.