ஆதிக்க ஜாதியினர் எதிர்த்ததால் அருந்ததியர் சத்துணவு பணியாளரை இடம் மாற்றுவதா? வீரமணி கண்டனம்
சாதி காரணமாக அருந்ததியர் சத்துணவு பணியாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் அருகே அவினாசி அருகே அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சத்துணவு பணியாளர் சமைப்பதற்கு ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பதை தொடர்ந்து அவரை பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவினாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக இருக்கும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், அப்பகுதி ஆதிக்க சாதியினர் அவரை பணியிடமாற்றம் செய்யக் கோரி வந்தனர். இதைத்தொடர்ந்து, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற பெண் பணியாளர் கடந்த திங்கள் கிழமையன்று சத்துணவுத் திட்டத்தின்கீழ் சமையல் பணியில் அமர்த்தப்பட்டார். அந்த ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட பெண் சமையல் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துப் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.
இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தப் பெண் பணியாளரை வேறு பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இது, அப்பட்டமான தீண்டாமையை கடைப்பிடிக்கும் சட்ட விரோத, சமுதாய விரோத நடவடிக்கையாகும்.
தீண்டாமை ஒழிப்பு என்னும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அருந்ததியர் பெண்மணி அதே பள்ளியில், அதே பணியைத் தொடரவேண்டும்.
சில ஆண்டுகளுக்குமுன் தருமபுரி மாவட்டத்தில் இதுபோல சத்துணவு சமையல் பணியாற்றிய பெண்ணை இடமாற்றம் செய்தபோது திராவிடர் கழகம் தலையிட்டது - விடுதலையில் அதைக் கண்டித்து எழுதப்பட்ட காரணத்தால், அந்த இடமாற்றம் ரத்து செய்யப்பட்டது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் காரணமாக பெரும் சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியுள்ள நிலையில், இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது என்பதைக் கவனிக்கவேண்டும்.
முதல்வர் உடனடியாக தலையிட்டு, தீண்டாமையைக் கடைப்பிடித்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதோடு, பணி மாற்றம் செய்யப்பட்ட அந்த அருந்ததியர் சமூகப் பெண் பணியாளரை அதே பள்ளியில் பணியாற்றிட அனுமதிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தவேண்டிய நிலை ஏற்படும்'' என்று கி.வீரமணி எச்சரித்துள்ளார்.