ஜனநாயகம் வெல்லும், பண நாயகம் மிரட்டினாலும்.. கி.வீரமணி உறுதி!
சென்னை: தமிழகம் முழுவதும் பண நாயகத்தை வைத்து மிரட்டிப் பார்க்கிறார்கள். ஆனால் கடைசியில் ஜனநாயகம்தான் வெல்லும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று ஓட்டுப்போட்ட பின்னர் செய்தியாளர்களிடம் வீரமணி பேசுகையில்,
இன்று காலை 8.45 மணிக்கு - ராகுகாலம் என்று மற்றவர்கள் நினைக்கின்ற மூடநம்பிக்கை நேரத்தில் - சரியாக வாக்குகளைப் பதிவு செய்தோம். என்னுடைய துணைவியார், மகன், மருமகள், பேரப் பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து வந்து வாக்குப் பதிவு செய்தோம்.
நிச்சயமாக, இந்தத் தொகுதி மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும், பண நாயகம் எவ்வளவு மிரட்டினாலும், கருணாநிதி தலைமையில், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்து - ஜனநாயகம் வெல்வது உறுதி. இதையே இந்தத் தேர்தல் சொல்லும் என்றார் அவர்.
இரண்டு தொகுதிகளில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தேர்தல் ஆணையம் ஓரளவிற்கு இப்பொழுதுதான் விழித்துக் கொண்டிருக்கிறது- காலதாமதமாக விழித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் முக்கியமானது என்றார் வீரமணி.