அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள இலவசங்களின் ரகசியம் இது தான்: கி. வீரமணி
கோவை: எப்படியும் பதவிக்கு வரப் போவது இல்லை. அதனால் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையில்லை. எனவே, வாக்குறுதிகளை தாராளமாக அள்ளிவிடலாம் என்று நினைக்கிறது அதிமுக என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கோவைக்கு வந்திருந்தார். அங்கு அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை பற்றி கருத்து தெரிவிக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறுகையில்,
அதிமுக
வழக்கமாக அனைத்து கட்சிகளுக்கும் முன்பாக தேர்தல் அறிக்கை வெளியிட்டு வந்தது அதிமுக தான். அப்படி இருக்கையில் தேர்தலுக்கு 10 நாட்கள் உள்ள நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
திமுக
அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள பல அறிவிப்புகள் பிற கட்சிகள் அதிலும் குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையை மையமாகக் கொண்டு அதிமுக தனது தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளது தெரிகிறது.
வாய்ப்பு இல்லை
இந்த தேர்தலில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதை அதிமுக உணர்ந்துள்ளதற்கு தேர்தல் அறிக்கை ஒரு சான்று. பிற கட்சிகள் இலவசங்களை அறிவிக்காத நிலையில் அதிமுகவோ செல்போன் கொடுப்போம், அதை கொடுப்போம், இதை கொடுப்போம் என்று தெரிவித்துள்ளது.
மின்வாரியம்
மின்வாரியம் கடனில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் ஒரு குடும்பத்திற்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்றால் பல குடும்பங்கள் 100 யூனிட்டாகவே ஆகிவிடுவார்கள். கூட்டுக் குடும்பங்களாக வாழ்பவர்கள் தனிக் குடும்பங்கள் என்று கணக்கு காட்டுவார்கள். இந்த சுமையை மின்வாரியம் எப்படி தாங்கும்?
பதவி
எப்படியும் பதவிக்கு வரப் போவது இல்லை. அதனால் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையில்லை. எனவே, வாக்குறுதிகளை தாராளமாக அள்ளிவிடலாம் என்று நினைக்கிறது அதிமுக. மக்களின் வாக்குகளை பறிப்பதற்காக அளிக்கப்பட்டுள்ள மயக்க பிஸ்கட் தான் இந்த தேர்தல் அறிக்கை.