சங்கரராமன் வழக்கு.. சு.சாமி கொடுத்த மனு... என்ன சொல்கிறது பாஜக?: கி.வீரமணி கேள்வி
சென்னை: சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து காஞ்சி சங்கராச்சாரியாரை விடுதலை செய்ததை எதிர்த்து அப்பீல் செய்யக் கூடாது என்று சுப்பிரமணிய சாமி மனு கொடுத்துள்ளார். இதற்கு அவர் சார்ந்த பாஜக என்ன சொல்கிறது பாஜக என்று கேட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் இருவர் உள்ளிட்டவர்கள் புதுவை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய புதுவை மாநில அரசு முடிவு செய்ய ஆளுநரின் அனுமதியும் பெற்றாகி விட்டது. சட்ட நடவடிக்கைகள் துவங்கி விட்டன.
இந்தச் சூழ்நிலையில் சுப்பிரமணிய சாமி என்பவர் அதிகப் பிரசங்கித்தனமாக குடியரசு தலைவரிடம் மனு ஒன்றினைக் கொடுத்துள்ளார். குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு புதுவை ஆளுநர் அளித்த அனுமதியைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிஜேபியைச் சேர்ந்தவராக இருக்கும் நிலையில், இந்தக் கருத்து பி.ஜே.பி.யின் கருத்தா? அல்லது பிஜேபி தலைமையிலான அரசின் கருத்தா? என்ற சந்தேகம் பொது மக்களுக்கு ஏற்படுகிறது. இதுகுறித்து பிஜேபி கட்சி தலைமையும், பிஜேபி ஆட்சித் தலைமையும்தான் தெரிவிக்க வேண்டும்.
ஒரு மாநில ஆட்சி முடிவெடுத்து, ஆளுநரும் அனுமதியளித்த நிலையில், குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று ஒருவர் சொல்லுவது, அரசமைப்புச் சட்டத்தில் மதிப்புறு நிலையில் வைக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரையே தேவையில்லாத சிக்கலில் மாட்ட வைக்கும் முயற்சி என்று கருதிடவும் இடம் இருக்கிறது.
ஏற்கெனவே பிரேமானந்தா சாமியார் என்பவர் செய்த குற்றங்களுக்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
நித்யானந்த சாமியும் செய்த குற்றங்களுக்காக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதும் செய்யப்பட்டார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் காஞ்சி சங்கராச்சாரியார் மீது கொலை குற்றம் உள்ளிட்ட வழக்கில் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதும், அதற்குக் குடியரசு தலைவரின் அதிகாரச் செல்வாக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கோருவதும் தமிழ்நாட்டு மக்களிடத்தில் வேறுவிதமான எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
அதிலும் குறிப்பாக சங்கரராமன் கொலை வழக்கில் மொத்தம் 177 சாட்சிகளில் 77 பேர் பிறழ்சாட்சி என்பது இதற்கு முன் எங்கும் கேள்விப்பட்டிராத ஒன்றே! கொலை செய்யப்பட்ட சங்கரராமன் குடும்பத்தினரும் இந்த வழக்கில் மேல் முறையீடு தேவை என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் குடியரசு தலைவர் இதில் விலகியிருப்பது அவசியம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்?
கழகத் தோழர்களும் நீதியின்மீது கவலையுள்ள பெரு மக்களும் கீழ்க்கண்ட முகவரிக்கு மின் அஞ்சல் மூலம் கீழ்க்கண்ட வாசகத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
The President of India
Rashtrapati Bhawan
New Delhi
Honourable Sir,
The decision by Puducherry Government to go in for appeal against the acquittal of 24 persons including Kanchi Jeyendra Saraswathi and Vijayendra Saraswathi, two Sankaracharyas, in the Sankararaman murder case should be allowed to proceed without any delay. Any effort to stall the appeal process would give wrong impression in the minds of people of Tamilnadu and Puducherry that Chief Executive of this country viz. President is intervening in the judicial process.
The family of the slain Sankararaman through this appeal, are eagerly expecting justice as also the people of Tamilnadu. The murder was committed in the Varadarajasamy Temple premise.
We once again request your goodself to kindly resist any effort by vested interests in stopping this appeal process.
Email address: [email protected] and [email protected]
என்று வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.