கருணாநிதி தனிமனிதரல்ல.. திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம்: கி.வீரமணி பேச்சு
கருணாநிதி தனிமனிதரல்ல திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம் என திக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கருணாநிதி தனிமனிதரல்ல, திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம் என்று கூறியுள்ளார்.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல் மெரினாவில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது சமாதிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருணாநிதியின் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"திமுக தலைவர் கருணாநிதி தனிமனிதர் அல்ல. அவர் திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம். நான்காவது அத்தியாயம் தொடங்கப்பட வேண்டும். நான்காம் தலைமுறை தொடர வேண்டும். திராவிடர் முன்னேற்றக் கழகத்துக்கு தாய்க்கழகம் திராவிடர் கழகம் எப்போதும் கவசமாக இருக்கும்.
திமுகவுக்கு தாய்க்கழகமான திராவிடர் கழகம் கேடயமாக இருக்கவேண்டிய நேரத்தில் கேடயமாக இருக்கும். வாளாக சுழல வேண்டிய நேரத்தில் வாளாக சுழலும்.
திமுகவில் எந்த வித பிரச்சனையுமில்லாமல் அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கருணாநிதியின் தலைமை எவ்வளவு அருமையான தலைமை.
கருணாநிதியின் ஆற்றல் மிகுந்த தலைமை, திமுகவின் 50 ஆண்டு தலைமை என்பதை நிரூபித்துள்ளார்கள். அதைப் போலவே கட்சிக் கட்டுக்கோப்பாக இருந்து திமுக நடைபோட வேண்டும். அதற்கு தாய்க்கழகம் திராவிடர் கழகம் என்றும் துணை நிற்கும்" என்று தெரிவித்தார்.