வந்தே மாதரம் பாடலை கட்டாயப்படுத்தி பாடுவது மதச்சார்பின்மைக்கு எதிரானது: கி.வீரமணி கண்டனம்!
வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று சொல்வது மதச்சார்பின்மை தத்துவத்திற்கு எதிரானது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
சென்னை : இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக் சர்ச்சை ஏற்படுத்திய வந்தே மாதரம் பாட கட்டாயப்படுத்துவது மதசார்பின்மைக்கு எதிரானது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: வங்கமொழி புரட்சிக் கவி பங்கிம் சந்திர சட்டர்ஜியால் 1876ம் ஆண்டு எழுதப்பட்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக முழங்கப்பட்டது. வங்காள மொழி மற்றும் சமஸ்கிருத சொற்களைக் கொண்டு எழுதப்பட்ட வந்தே மாதரம் இந்தியாவின் நாட்டுப் பண்ணாக பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன நாட்டுப் பண்ணாக முடிவு செய்யப்பட்டது.
வந்தே மாதரப் பாடல் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டதாகக் கருதப்பட்டது. மறைமுகமாக இந்து தெய்வமான துர்கைக்கும் ஒப்புமைப் படுத்துவதாக கருதியதால், சமய சார்பற்ற நாட்டுப்பண்ணை தேர்ந்தெடுக்கும் முகமாக வந்தே மாதரம் நாட்டுப்பண்ணாக்கப்படவில்லை; மேலும் வந்தே மாதரப் பாடல் இடம்பெற்றிருந்த பங்கிம் சந்திரரின் நூல் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்ததாகவும் கருதப்பட்டது.
சர்ச்சைக்குரிய வரிகள்
1937ல் இந்திய தேசிய காங்கிரஸ், இப்பாடலின் தகுதி நிலை குறித்து விரிவாக கலந்துரையாடியது. பாடலின் முதல் இரு பத்திகள் தாய்மண்ணின் அழகைப் போற்றிப் பாடுவதாக இருந்தாலும் பிற பத்திகள் தாய் மண்ணை துர்கையுடன் ஒப்புமைபடுத்துவதாக கருதப்பட்டது. எனவே, பாடலின் முதல் இரு பத்திகளை மட்டும் நாட்டுப் பாடலாக அறிவிப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது.
2006ல் கிளம்பிய சர்ச்சை
வந்தே மாதரம் நாட்டுப் பாடலாக அறிவிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 7, 2006 அன்று இந்தியா முழுக்க அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் பகல் 11 மணிக்கு இப்பாடலைப் பாட வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்தது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் இப்பாடலை பாடுவதை மாணவர்களின் விருப்பத்துக்கு விட்டிருந்தாலும், பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இப்பாடலை பாட வைப்பதற்கு உறுதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இஸ்லாமியர்களுக்கு எதிரானது
இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை உள்ளடக்கி இருந்த காரணத்தாலேயே வந்தே மாதரம் பாடுவது நிறுத்தப்பட்டது.
மதச்சார்பின்மை தத்துவம் என்ன ஆகும்
மீண்டும் வந்தே மாதரம் பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்று சொல்வது மதசார்பின்மை தத்துவத்திற்கு எதிரானது. வந்தே மாதரம் பாடல் குறித்து சர்ச்சை எழுந்தததாலேயே அது சட்டசபையில் பாடுவது நிறுத்தப்பட்டது, இதற்கான ஆதாரங்கள் சட்டசபை குறிப்பேடுகளிலேயே உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.