குடிப்பவர்கள் டாட்டா, பிர்லாவின் பேரன்களா? தீபாவளி பெயரில் காசை கரியாக்குவதா.. வீரமணி கேள்வி
குடிப்பவர்கள் எல்லாம் டாட்டா, பிர்லாவின் பேரன்களா என்றும் தீபாவளி என்ற பெயரில் காசை கரியாக்குவதா என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: 358 கோடிக்கு மதுபானத்தை வாங்கி குடிப்பவர்கள் எல்லாம் டாட்டா பிர்லாவின் பேரன்களா என்றும் தீபாவளி என்ற பெயரில் காசை கரியாக்குவதா என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீபாவளி என்ற மூடநம்பிக்கையை, ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பைப் புதுப்பித்து, புராண காலத்திற்கு நம்மை அழைத்துச் சென்று அறியாமையெனும் காரிருளில் தள்ளும் பண்டிகை முடிந்த நிலையில், அதன் பாரதூர விளைவுகள் பற்றி, பொது ஒழுக்கத்தில், சமூக ஒழுக்கத்தில், அறிவியல் மனப்பான்மை வளர்ச்சியில் - அக்கறையும், கவலையும் கொண்டுள்ள நாட்டின் நற்குடி மக்கள் சிலராவது நடுநிலையோடு சிந்தித்துப் பார்க்க முன்வர வேண்டும்.
தீமையை வென்றதா?
இந்தப் பண்டிகையினால் தீபாவளி போனஸ் கிடைக்கிறது; புத்தாடைகள், தின்பண்டங்கள், விடுமுறை குதூகலங்கள் - இவைகளுக்கான புராணக் கதையைத் தள்ளி விடுங்கள் - இதற்காகவாவது கொண்டாடவேண்டாமா? என்பர் சிலர்!
மதவாதிகள் மிகவும் சாமர்த்தியமாக தீபாவளி பண்டிகை தீமையை - நன்மை வென்று காட்டும் நாள் என்று உண்மையை தலைக்குப்புற கவிழ்த்துப் போட்டுப் பேசுவர்.
நடந்த இவ்வாண்டு பண்டிகை நாளுக்கு முன்பும், பின்பும் நடந்தேறிய கொடுமைகளைப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டாமா?
ரூ.358 கோடி மது விற்பனை
டாஸ்மாக் என்ற அரசின் மது விற்பனைக் கடைகளில் 358 கோடி ரூபாய் மது விற்பனையாகி உள்ளது; இது சென்ற ஆண்டைவிட, 11 விழுக்காடு கூடுதலாம்!
என்னே கொடுமை! இந்தப் படி இந்த மது வகைகளை வாங்கிக் குடித்தவர்கள் - குடிப்பவர்கள் எல்லாம் யார்? டாட்டா, பிர்லாவின் பேரன்களா? அதானி, அம்பானிகளின் உறவினர்களா? ஏழைகள் - குடியிருக்க சொந்தக் குடிசையும் இல்லாதவர்கள்தானே!
பட்டாசுகளால் தீ விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப் பலிகள் பல நூற்றுக்கணக்கில் இந்தியா முழுவதிலும் ஏற்பட்டுள்ளன!
பல கோடி ரூபாய் பட்டாசுகளும், தொழிற்சாலைகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன! உயிர் பலி ஒருபுறம்; காசைக் கரியாக்கியது மறுபுறம்.
சுற்றுச்சூழல் காற்று மாசு என்பது மனிதகுலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தல் அல்லவா! இதனை ரூபாய் மதிப்பில் கணிக்க முடியாதே!
சுமார் 800 விபத்துகள் நேற்றுவரை நடந்துள்ளன - கருணையே வடிவான எந்தக் கடவுளும் காப்பாற்ற முன்வரவில்லையே!
தீபாவளி போனஸ் - டாஸ்மாக்கில்தான் மறுசுழற்சியோ? பக்தி போதை, மத போதை, மது போதை - இத்தியாதி போதைகள்!
திரைப்படங்களும் - பெரிது சின்ன திரை என்று கூத்தடிக்கும் கும்மாளத்தில், தமிழர்களின், தமிழ்நாட்டின் பறிபோகும் உரிமைகள் - காவிரி நதிநீர் ஆணைய உரிமை முதல் சேலம் இரும்பாலை, நெய்வேலி நிலக்கரி, பாலாற்றில் அணைகட்டும் ஆந்திர அரசின், முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உயர்த்திக் கொள்ள உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும், செயல்படுத்த முடியாத தமிழக அரசு கை பிசைந்த நிலை - கருநாடகத்திற்குச் சாதகமான மத்திய அரசு நிலை - நுழைவுத் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, பட்டப்பகலில் பறிபோகும் இட ஒதுக்கீட்டு முறை - அரசு அலுவலகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் என்ற நிலைபற்றி எண்ணுவதை திசை திருப்பிவிட்டு, மானமும் உரிமையும், மனிதத்தையும் பறக்கும்படிச் செய்யத்தானா இந்தப் பண்டிகைகள்? மகா வெட்கம்! வெட்கம்!!
சிந்தியுங்கள் என்று வீரமணி கூறியுள்ளார்.