தமிழகத்திற்கு இதுவரை ரஜினி என்ன செய்திருக்கிறார் என்ற கேள்வி துரத்தும்.. கி.வீரமணி கடும் விமர்சனம்
சென்னை: 'எல்லாம் அவன் பார்த்துப்பான்' என்று சொல்லுகிற ரஜினிகாந்த் ஆட்சியில் அமர ஆசைப்படுகிறார் என்று கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரச்சாரம் செய்யட்டும், களப்பணிகளில் இறங்கட்டும், போராட வேண்டிய தருணத்தில் போராட்டத்தில் குதிக் கட்டும், அதற்காகச் சிறை செல்ல நேர்ந்தால், அதனைச் சிரித்த முகத்தோடு ஏற்றுக் கொள்ளட்டும்! (சினிமாவில் சிறைக்குள் செல்லுவது என்பது வேறு!).
முதல்வர் கிரீடம்
இவற்றை எல்லாம் எதுவும் செய்யாமல், பொது வாழ்க்கையில், நாட்டுப் பிரச்சினைகளில் ஒரு சிறு ‘துரும்பை'க்கூடக் கிள்ளிப் போடாதவர்கள் நேரடியாக ஆட்சியைப் பிடிப்போம், முதல் அமைச்சர் கிரீடத்தைச் சூட்டிக் கொள்வோம் என்று சொல்லுவதெல்லாம் வெறும் சிறுபிள்ளைத்தனம் என்று சொல்ல முடியாது, மக்கள் ஏமாளிகள், முட்டாள்கள், சினிமாத்துறையில் தங்களுக்கு இருக்கும் கவர்ச்சியும், ரசனையும், ஈர்ப் பும் போதும் - அதுவே நம் கைமுதல், மக்கள் தம் வலையில் வீழ்வார்கள் என்ற நினைப்பு ஆபத்தானது - மோசமானது - நேர்மையற்றதும்கூட!
சினிமாக்காரர்கள் கையில் ஆட்சி
இதற்கு முன் சினிமாக்காரர்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கியதால் ஏற்பட்ட விளைவுகள் போதும் - போதும்; இனியும் அந்த நிலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது.
பகுத்தறிவுவாதி என்பவர் இப்படி யென்றால், ‘அவன் இருக்கான் - எல்லாம் அவன் பார்த்துப்பான்' என்று சொல்லுகிற ரஜினிகாந்த் ஆட்சி அதிகாரப் பீடத்தில் அமர ஆசைப்படுகிறார். "சர்வமும் சர்வேசன் மயம்" என்று சொல்லி கடவுளைக் கைகாட்டிவிடுவார். "ஆண்டவன் சொல்றான் - அடியேன் செய்கிறான்" என்று சுலபமாக சொல்லிவிடுவாரே. இது தமிழ்நாட்டில் எடுபடுமா?
தமிழகத்திற்கு ரஜினி என்ன செய்தார்?
தமிழ்நாட்டுக்குக்காக இதுவரை அவர் என்ன செய்திருக்கிறார்? அவரின் முதலீடுகள் எல்லாம் எந்த மாநிலத்தில் என்ற கேள்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருக்குமே! இவற்றை எல்லாம் தாக்குப் பிடிக்கும் இயல்பை - திறனைக் கொண்டவரா ரஜினிகாந்த்? என்னே வினோதம் - என்னே விபரீதம்!
படுக்கையில் விழுந்த அதிமுக
தமிழ்நாட்டில் 1967 முதல் தி.மு.க ஆட்சியும், ‘திராவிட' ‘அண்ணா' பெய ரில் அ.இ.அ.தி.மு.க.வும் ஆட்சி நடத்தி வந்துள்ளன. ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணத்தைத் தழுவிய நிலையில் அ.இ.அ.தி.மு.க பிளவுபட்டு, பலகீன நோயால் படுக் கையில் விழுந்துவிட்டது. அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட நிலைக்கு நடிகர்கள் ஆளாக வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள். தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் உருவாக்கி வைத்துள்ள அடிப்படைக் கட்டுமானத்துக்குச் சேதம் விளைவிக்க காவிகள் வந்தாலும், அரிதாரங்கள் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள், கற்பிக்கவேண்டும்; இதில் இப்போது ஏமாந்து விட்டால், இன்னும் எழ, மீள மேலும் 25 ஆண்டுகள் ஆகும்! இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.