ரஜினிகாந்த்துக்கும், கமல்ஹாசனுக்கும் துணிச்சல் இல்லை: கி.வீரமணி சாடல்
Recommended Video
சென்னை: ஆண்டாள் விவகாரத்தில் கருத்து சொல்ல ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய நடிகர்களுக்கு துணிச்சல் இல்லை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டினார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி மாநாடு நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் பங்கேற்க வந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:
தற்போதுள்ள தமிழக அரசு முழுக்க முழுக்க பாஜக தயவில் நடைபெறும் ஆட்சி என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
பிரதமர் படம்
தமிழக அரசு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காலண்டரில், முதல்வர் பழனிசாமி படத்துடன் பிரதமர் மோடி படத்தையும் அச்சிட்டுள்ளது. இந்த சந்தேகங்களை உறுதி செய்வதாக அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு மிகப்பெரிய அளவில் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்த தமிழக அரசு, திராவிடர் கழக ஊர்வலத்திற்கு தடை விதித்தது. இது கண்டிக்கத்தக்கது.
கருத்துக்காக எதிர்க்கவில்லை
ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவின் கருத்துக்காக அவரை வலதுசாரிகள் எதிர்க்கவில்லை. ஆனால் அவரது கருத்தை மாற்றி திரித்துக் கூறி தமிழகத்தில் தாங்கள் கால் ஊன்ற வாய்ப்பு கிடைக்குமா எனதான் நினைக்கின்றனர். இவர்கள் என்னதான் செய்தாலும் கூட, நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற முடியாது என தெளிவாக தெரிந்துவிட்டது.
துணிவு, சிந்தனை இல்லை
ரஜினியும் கமலும் தங்களைப் பற்றியே தெளிவில்லாமல் உள்ளனர். அப்படி இருக்கும்போது, ஆண்டாள் விவகாரம் குறித்து கருத்து கூறும் அளவுக்கு அவர்களுக்கு துணிவோ, ஆழமான சிந்தனையோ இல்லை என்பதையே நடைபெறும் சம்பவங்களும், அவர்களின் மவுனமும் காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.