கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொரிந்தால் யார்தான் என்ன செய்ய முடியும்... கி.வீரமணி
சென்னை: அதிமுகவின் ஆதரவாளர்கள் கூட இந்த ஆவின் பால் விலை உயர்வை விரும்பவில்லை. இது மக்கள் நல அரசு என்பதற்கு எதிரானதாகும். இதை கண்டிப்பாக மறு பரிசீலனை செய்தே ஆக வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அரசு கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிய ஆசைப்படுகிறது என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அன்றே கண்டித்தது தி.க.
அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 2011 இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் வராததுமாக பால் விலை, மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியது. அப்பொழுதே அதுகுறித்துக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டோம்.
அனறு கடுமையாக கண்டித்த ஜெயலலிதா
‘‘மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் விலை ஒன்றுக்கு ரூ.2.10 ஏற்றியதற்கு எவ்வளவுக் கடுமையாக அறிக்கை வெளியிட்டார் நமது முதலமைச்சர்? நாமும் அந்த விலையேற்றத்தைக் கண்டித்தோம். பெட்ரோலைப் பயன்படுத்துபவர்கள் வாக்காளர்களில் ஒரு பகுதிதான். ஆனால், அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பால், பேருந்துக் கட்டணங்கள் தமிழக அரசால் பல மடங்கு ஏற்றப்பட்டு, நடைமுறைக்கு அமலில் உடனடியாக வரும் என்று அறிவிக்கப்பட்டு விட்டதே!
எப்படியெல்லாம் சொன்னார்
வரலாறு காணாத அளவுக்கு 75 விழுக்காடு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டது. மின்சாரக் கட்டணத்தை உயர்த்துமாறு மின்வாரியத்திற்குப் பரிந்துரை செய்து அனுமதியளித்துள்ளனர். பால், பேருந்து, மின்சாரம் இவைகளைப் பயன்படுத்துவோர் அம்பானிகளோ, கிருபானிகளோ, டாடா, பிர்லாக்களோ, ஆலை முதலாளிகளோ, பெருமுதலாளிகளோ மட்டும் அல்ல; பெரும்பாலும் இந்த ஆட்சிக்கு வாக்களித்த ஏழை, எளிய மக்கள்தான்.
எழும்பிக் குமுறும் குரல்கள்
வாக்களித்தவர்களுக்கு ஆறு மாதத்திற்குள் இந்த அரசு தரும் பரிசு இதுதானா? இது நம்முடைய கேள்வியல்ல - மெஜாரிட்டி ஆட்சி என்று மார்தட்டும் முதலமைச்சரை அவரது ஆட்சியை நோக்கி மக்கள் எழும்பிக் குமுறும் குரல்கள் ஆகும்'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தேன்.'' (‘விடுதலை', 21.11.2011)
ஆபத்தான இடி
இப்பொழுது இன்னொரு ஆபத்தான இடியை ஏழை, எளிய, நடுத்தரப் பாட்டாளி மக்கள் தலையில் இறக்கி வைத்துள்ளது தமிழ்நாட்டை ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசு; லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 அளவுக்கு பால் விலை உயர்வாம்; ஓர் அத்தியாவசியமான அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருள்மீது இவ்வளவு அபாயகரமான விலை ஏற்றம்; இது என்ன கொடுமை!
ஈவு இரக்கமற்ற மனிதநேயமற்ற செயல்
நட்டம் ஏற்படுகிறது என்பதற்காக இப்படி ஒரு ஈவு இரக்கமற்ற, மனிதநேயமற்ற செயலில் ஈடுபடலாமா?
2011 நவம்பரில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.6.25 உயர்த்தியதும் இதே அ.தி.மு.க. ஆட்சிதான். இப்பொழுதோ ரூ.10 அதிகம்.
பால் விலை உயர்வு என்றால், அத்தோடு முடியக் கூடியதல்ல; அது தொடர்புடைய 43 பொருள்கள் இருக்கின்றன. அவை அத்தனையும் 15 சதவிகிதம் அளவுக்கு உயர்கின்றன.
எப்போதும் லாபத்தை எதிர்பார்ப்பது தவறு
எல்லாத் துறைகளிலும் இலாபம் வரும் என்று அரசு எதிர்பார்க்கக்கூடாது; அப்படி எதிர்பார்ப்பது தனிப்பட்ட வியாபாரிகளுக்கான ‘தர்மமாக' இருக்கலாமே தவிர, அரசின் ‘தர்மமாக' இருக்க முடியாது. (வியாபாரிகள்கூட தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலையைக் கண்மூடித்தனமாக ஏற்றிவிட முடியாது; அதற்கும் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது) அரசோ அப்படிப்பட்டதல்ல - மக்கள் நலன் சார்ந்தது! ((Welfare State).
அதிமுகவை ஆதரிப்போர் கூட விரும்பவில்லை
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முக்கிய கட்சிகளும் எதிர்த்துள்ளன - போராட்டங்களையும் அறிவித்துள்ளன. இன்னும் சொல்லப்போனால், அ.இ.அ.தி.மு.க.வை ஆதரிப்பவர்கள்கூட இந்தப் பால் விலை உயர்வை விரும்பவில்லை - எதிர்த்துக் கருத்துக் கூறியுள்ளனர்.
இடித்துச் சொல்வது நமது கடமை
தமிழ்நாடு அரசு இதில் மறுபரிசீலனை செய்யவேண்டும்; மறுபரிசீலனை என்ற பெயரில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் குறைப்பு என்ற கண் துடைப்பு வேலையில் இறங்கினாலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதையும் இடித்துச் சொல்லுவது நமது கடமையாகும்.
கொள்ளிக்கட்டையில் தலையைச் சொரிந்தால்
அடுத்து மின்கட்டண உயர்வு என்ற அதிர்ச்சி (ஷாக்) அச்சாரம் போட்டுக்கொண்டு இருக்கிறது. அரசு கொள்ளிக்கட்டையை எடுத்துக்கொண்டு தலையைச் சொரிய ஆசைப்பட்டால், யார்தான் என்ன செய்ய முடியும்? என்று கூறியுள்ளார் கி.வீரமணி.