மனிதநேயம் தாண்டவமாட வேண்டிய நேரத்தில் வறட்டு கவுரவமும், பிடிவாதமும் தலைதூக்கி ஆடலாமா?: கி. வீரமணி
சென்னை: மனிதநேயம் தாண்டவமாட வேண்டிய இக்கட்டான இக்கால கட்டத்தில் வறட்டு கவுரமும், வீண்பிடிவாதமும் தன்முனைப்பும் தலைதூக்கி ஆடலாமா? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய அரசின் கப்பற்படை மூலம் தமிழ்நாடு மழை வெள்ளம் துயர் துடைப்புப் பணிக்காக இரண்டு கப்பல்கள் பொருள்களுடன் சென்னைக்கு வந்துள்ள நிலையில், அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் வேதனையுடன் நாங்கள் கொண்டு வந்துள்ள பொருள்களை யாரிடம் ஒப்படைப்பது என்று தெரியவில்லை, தமிழக அரசிடம் ஒப்படைக்க முறைப்படி சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்று நேற்று கூறியிருப்பது வேதனையும், வெட்கப்படவும் வேண்டிய செய்தி அல்லவா!
ஒருபுறம் பால் தேவை என்று, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதியுறும் தாய்மார்கள் கண்ணீர் விட்டுக் கதறும்போது, தனியார் வைத்துள்ள ஒரு லட்சம் லிட்டர் பாலைக் கொள்முதல் செய்ய தமிழக பால்வளத்துறை ஏன் தயங்க வேண்டும்?
கரூர் அருகில் சில பால் உற்பத்தியாளர்கள் அப்பாலின் ஒரு பகுதியைத் தரையில் ஊற்றி தங்கள் கோபத்தை, வருத்தத்தை தீர்த்துக் கொள்ள முயலும் நிலவரம் என்பது தமிழக அரசுக்குப் பெருமை சேர்ப்பதா?
கண்டனத்திற்குரியதா? மனிதநேயம் தாண்டவமாட வேண்டிய இக்கட்டான இக்கால கட்டத்தில், வறட்டு கவுரமும், வீண்பிடிவாதமும் தன்முனைப்பும் தலைதூக்கி ஆடலாமா?
மக்கள் தீர்ப்பளிக்கும் காலத்தில் இவையெல்லாம் மறந்து விடும் என்று நினைப்பது அசல் தப்புக் கணக்காக முடியும் என்பது கல்லுப் போன்ற உண்மை அல்லவா!!
இவற்றையெல்லாம் தமிழக அரசு சீர்தூக்கிப் பார்த்து அணுகுமுறையை மாற்றுதல் அவசியம் - அவசியம்! என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.