ஜெர்மனியில் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைக்கிறார் கி.வீரமணி
சென்னை: பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அழைப்பை ஏற்று ஜெர்மனி செல்லும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அங்கு சுயமரியாதைத் திருமணம் ஒன்றை நடத்தி வைக்க இருக்கிறார்.
இது தொடர்பாக திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜெர்மனியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் அழைப்பை ஏற்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தரும், திராவிடர் கழக தலைவருமான கி.வீரமணி ஜெர்மனி நாட்டுக்கு பயணமாகிறார். ஜெர்மனி கொலோன் பகுதியில் நான்கு நாட்கள் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். 3-ந் தேதி அன்று பொதுமக்களிடையே ‘திராவிட இயக்கமும், பெரியாரின் பகுத்தறிவுக்கொள்கைகளும்' என்னும் தலைப்பில் கொலோன் பகுதியின் மையப்பகுதியில் நியூமார்கட் ஜோயெஸ்ட் அருங்காட்சியகம், ராடென்ஸ்ட்ராட்ச் பகுதியில் பேசுகிறார்.
4-ந்தேதி அன்று ‘இந்தி எதிர்ப்பு இயக்கம்' என்னும் தலைப்பில் கொலோன் பல்கலைக்கழகத்தில் உரை ஆற்றுகிறார். 5-ந் தேதி அன்று வட்ட மேசை விவாதத்தில் ‘திராவிட இயக்கமும் பகுத்தறிவு வாதங்களும் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகளும்' என்கிற தலைப்பில் நடைபெறும் விவாதத்தில் கொலோன் பல்கலைக்கழகத்தில் தத்துவ இயல்துறை மற்றும் அரசியல் அறிவியல் துறை மாணவர்களுடன் விளக்க உரை ஆற்றுகிறார். மேலும் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை சந்திக்கிறார். அவருடன், துணை வேந்தர் என்.ராமச்சந்திரனும் உடன் செல்கிறார். 6-ந் தேதி அன்று ஹெய்டில்பர்க் பல்கலைக்கழகத்தில் ‘உலகமயமாதல் காலக்கட்டத்தில் தமிழ்த்தேசியம்' என்கிற தலைப்பில் உரை ஆற்றுகிறார்.
கி.வீரமணி ஜெர்மனியில் இருக்கும்போது, சுயமரியாதைத் திருமணத்தையும் நடத்தி வைக்கிறார். 9-ந்தேதி சென்னைக்கு திரும்புகிறார்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.