விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டும்... முதல்வர் தலைமையில் டெல்டாவில் ஆய்வு செய்ய கி.வீரமணி கோரிக்கை
விவசாயிகளின் தற்கொலையை தடுக்க, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் காவிரி டெல்டா பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கி.வீரமணி கோரியுள்ளார்.
திருவாரூர்: டெல்டா பகுதி காய்ந்து விவசாயம் பொய்த்துப் போய் உள்ளதால் விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு கிடைக்கக் கூடிய வடகிழக்கு பருவமழை எதிர்ப்பார்த்த அளவில் பெய்ய வில்லை. இது தவிர, கர்நாடகத்தில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படுவதிலும் கர்நாடக அரசும், மத்திய அரசும் தமிழகத்திற்கு எதிராக அரசியல் செய்து வருவதால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீர் கிடைக்காமல் டெல்டா விவசாய மக்கள் தவித்து வருகின்றனர்.
விவாசயம் கடுமையாக பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும் அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும் இறந்துள்ளனர். இந்த நிலை தொடராமல் இருக்க, டெல்டா பகுதியை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான குழு ஒன்று ஆய்வு நடத்த வேண்டும் என்று கி.வீரமணி கோரியுள்ளார். இதுகுறித்து திருவாரூரில் செய்தியாளர்களிடம் மேலும் அவர் பேசியதாவது:
விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசு
வடகிழக்குப் பருவமழை போதிய அளவில் இல்லாததாலும், காவிரியில் இருந்து கர்நாடகம் முறையாக தண்ணீரை திறந்து விடாததாலும், டெல்டா பகுதி வறண்டு போய் உள்ளது. மத்திய அரசு போதுமான ஒத்துழைப்பு கொடுக்க வில்லை. அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடக மாநிலத்திற்கு சாதகமாக மத்திய அரசு வெளிப்படையாகவே நடந்து கொள்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவர்கள் மதிக்கத் தயாராக இல்லை.
தமிழகம் வறட்சி மாநிலம்
நமது மாநிலத்தில் துயர சம்பவம் ஏற்பட்டுள்ள நிலையிலும், டெல்டா மாவட்டங்களில் முழு கவனம் செலுத்தி விவசாயிகளின் துயரத்தை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் துடைக்க வேண்டும். டெல்டா விவசாய நிலங்கள் வறட்சி அடைந்துள்ளது. இதனால் வறட்சி பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும். அதற்கான உதவிகளைப் பெற வேண்டும்.
அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை
ஏற்கெனவே ஆளும் கட்சி விவசாயிகளை ஒருங்கிணைக்காததால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டார். இனிமேலும் அப்படி நடந்து கொள்ளாமல் ஒற்றுமையாக விவசாயிகளின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே விவசாயிகளின் தற்கொலை 32 ஆகஉயர்ந்துள்ளது. மற்றவர்களும் பஞ்சம் பிழைக்க வேறு மாநிலங்களுக்கு போகலாமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
விவசாயிகளுக்கு நஷ்டஈடு
இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களை வருவாய்த்துறை மூலம் கண்காணித்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும். உடனடியாக அனைத்து விவசாய சங்கங்களையும் அழைத்துப் பேச வேண்டும். அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து செல்ல வேண்டும். போராட்டத்தால் மட்டும் முடிவு காண முடியாது.
முதல்வர் தலைமையில் ஆய்வுக் குழு
இதில் எந்தவிதமான அரசியல் நோக்கமும் இல்லாமல், இதில் அரசியல் கட்டுப்பாடுகளை நீக்கிக் கொண்டு மத்திய அரசிடம் முழுமையாக வலியுறுத்த வேண்டும். முதல்வர் தலைமையில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் உயிரிழக்கும் விவசாயிகளை காக்க முடியும் என்று வீரமணி கூறியுள்ளார்.