திமுககாரர்கள் காலில் விழக்கூடாது.. ஸ்டாலின் அறிவிப்பிற்கு கி. வீரமணி பாராட்டு
தன்னைப் பார்க்க வரும் யாரும் காலில் விழக் கூடாது என்று அறிவித்துள்ள ஸ்டாலினுக்கு கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். சுயமரியாதையை காக்க ஸ்டாலின் முன்வந்துள்ளதாகவும் வீரமணி பாராட்டியுள்ளார்.
சென்னை: திமுகவின் செயல் தலைவராக அண்மையில் பொறுபேற்ற மு.க. ஸ்டாலின், தன்னை பார்க்க வரும் யாரும் காலில் விழக்கூடாது என்று கூறினார். இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தன்னைப் பார்க்க வரும் எவரும் காலில் விழக்கூடாது என்று தி.மு.க.வின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை விடுத்திருப்பது அறிந்து, தாய்க்கழகமாம், திராவிடர் கழகம் எல்லையற்ற மகிழ்ச்சியுடன், அவரை மிகவும் பாராட்டி மகிழ்கிறது.
'மானமிகு சுயமரியாதைக்காரர்!' என்று கருணாநிதி தம்மை குறிப்பிட்டுக் கொள்வார். மானமிகு சுயமரியாதைக்காரராக அந்நிலைக்கு இதன்மூலம் உயர்ந்து, சுயமரியாதை காக்க முன்வந்துள்ளார் நமது ஸ்டாலின் அவர்கள்!
தமிழ்ப் புத்தாண்டு மலரும் நிலையில் இத்தகைய மனித நேயமும், சுயமரியாதையும் அனைத்து கட்சிகளிலும் பெருகட்டும், வளரட்டும்!
அன்பும், பணிவும் காட்டுவது தவறல்ல; காலில் விழுவது மனித மாண்புக்கும், சுயமரியாதைக்கும் இழுக்கு என்பதை பெரியார் சீடர்களாகிய நாம் சொல்லி, வழிகாட்டாமல் வேறு எவர் காட்டுவர்?
தி.மு.க. செயல் தலைவரின் செயல் பரிமளிக்கிறது! பளிச் சிடுகிறது! வாழ்க! வளர்க என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
முன்னதாக. தொலைபேசியிலும், மு.க.ஸ்டாலினுக்கு கி. வீரமணி பாராட்டுகளைத் தெரிவித்தார்.