செப்.18-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: காவிரி, உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை
சென்னை: காவிரி பிரச்சினை குறித்தும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் வரும் 18-ம் தேதி அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றி பலமான எதிர்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களை கைப்பற்றலாம் என்ற நம்பிக்கை அக்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் பற்றி ஆலோசனை நடத்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கருணாநிதி தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 18.9.2016 (ஞாயிற்றுக் கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் மாவட்ட கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில் காவிரி நீர் பிரச்சனை, உள்ளாட்சி தேர்தல் பற்றி ஆலோசனை நடத்தப்படும்''என்று கூறப்பட்டுள்ளது.