நான் கேட்கும் இலாகாதான் வேண்டும்... சசிகலாவுடன் செங்கோட்டையன் மோதல்!
சசிகலாவிடம் தாம் விரும்பும் இலாகாவை ஒதுக்க செங்கோட்டையன் வலியுறுத்துகிறாராம். ஆனால் மன்னார்குடி தரப்போ இதற்கு மறுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: அமைச்சரவையில் தாம் கேட்கும் இலாகாதான் தர வேண்டும் என சசிகலாவுடன் செங்கோட்டையன் மல்லுக்கட்ட ஆரம்பித்திருப்பது அதிமுகவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுக பொதுச்செயலராக சசிகலா முயற்சிக்கிறார் என தகவல் வெளியான போது அதை கடுமையாக எதிர்த்தவர்களில் செங்கோட்டையனும் ஒருவர். இதற்காக அதிமுக எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் செய்தார் செங்கோட்டையன்.
ஆனால் அமைச்சர் பதவி தருவதாக கூறி சசிகலா தரப்பு பேரம் பேசியது. இதையடுத்து "சின்னம்மா" சசிகலா தலைமையை தாம் ஏற்பதாகவும் தம்மை பற்றி வரும் செய்திகளில் உண்மையில்லை எனவும் செங்கோட்டையன் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டார்.
கார்டனில் கெஞ்சிய செங்கோட்டையன்
அத்துடன் போயஸ் கார்டன் பங்களாவுக்கு போய் சசிகலாவிடம் இருகை கூப்பி நீங்க அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று கெஞ்சவும் செய்தார். இதன்பிறகு பல்வேறு நாடகங்களை நடத்தி அதிமுக பொதுச்செயலர் பதவியை கைப்பற்றிவிட்டார் சசிகலா.
அமைச்சரவை பட்டியல் ரெடி
இப்போது முதல்வர் பதவியையும் கைப்பற்ற சசிகலா முயற்சித்து வருகிறார். இப்போதே அமைச்சரவை பட்டியலையும் மன்னார்குடி தரப்பு தயாரித்துக் கொண்டிருக்கிறது.
செங்கோட்டையனுடன் பேரம்
இந்த பட்டியலில் செங்கோட்டையனுக்கு கதர் அல்லது உணவுத் துறை இலாகா ஒதுக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக செங்கோட்டையனிடம் சசிகலா கூறியிருக்கிறார்.
பிடிவாதத்தால் அதிர்ச்சி
ஆனால் செங்கோட்டையனோ எனக்கு போக்குவரத்து அல்லது உள்ளாட்சித் துறை இலாகாதான் வேண்டும் என உறுதியாக சொல்லிவிட்டாராம். இதனால் மன்னார்குடி தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளதாம். செங்கோட்டையன் கேட்ட இலாகாவை கொடுக்காவிட்டால் மீண்டும் போர்க்கொடி தூக்கிவிடுவாரோ என பீதியில் இருக்கிறதாம் போயஸ் கார்டன்.