பாஜக நிர்வாகிகளுடன் காலா படம் பார்த்தார் தமிழிசை!
காலா படம் நல்ல அரசியல் கருத்துக்களை சொல்வதால் அதை பார்த்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.
சென்னை: காலா படம் நல்ல அரசியல் கருத்துக்களை சொல்வதால் அதை பார்த்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.
காலா படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி உள்ளது. இதுவரை வந்த விமர்சனங்களில் காலா மிகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கபாலிக்கு பின் இந்த படம் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் காலா படத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் கண்டுகளித்தனர். பாஜக நிர்வாகிகள் சிலருடன் சேர்ந்து அவர் படத்தை பார்த்தார். இதற்கு பின் படம் குறித்து அவர் பேட்டியளித்தார்.
காலா படம் கருப்பாக ஆரம்பித்து கலராக முடிந்துள்ளது.காலா படத்தில் சில வண்ணங்களை விட பல வண்ணங்கள் வந்தது. ரஜினி திரைப்பட நடிகராக அரசியலுக்கு வந்துள்ளார். நிறைய நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர்.
சினிமா வாழ்க்கை வேறு அரசியல் வேறு. ரஜினியின் சினிமா வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் சேர்த்து வைத்து பார்க்க கூடாது. ரஜினி படத்தில் முன்பே அரசியல் இருந்தது. இது அவரின் முதல் அரசியல் படமல்ல.
நான் திரைப்படத்திற்கு மார்க் போட மாட்டேன். எங்கள் சகோதரர்கள் எல்லாம் ஒன்றாக பார்க்க ஆசைப்பட்டதால் காலா பார்த்தோம். இப்போது இந்த படம்தான் பிரபலமாகி இருக்கிறது. அதனால் பார்த்தோம்.
காதல் படங்களை விட காலா படத்தில் விருப்பம் அதிகம். காதல் கதைகளை விட சமூக சிந்தனை கொண்ட கதைகளே எனக்கு பிடிக்கும். எனவேதான் "காலா" திரைப்படம் பார்க்க வந்தேன்
யார் வேண்டுமென்றாலும் அரசியல்வாதி ஆகலாம். இயக்குனரும் அரசியல்வாதி ஆகலாம். காலா படத்தில் பாஜகவை விமர்சித்ததாக நான் பார்க்கவில்லை. சினிமாவை வெறும் சினிமாவாக பார்க்க வேண்டும். சமூக கருத்துகளைக் கொண்ட படம் என்பதால் காலாவை பார்த்தேன்.படத்தை அரசியலுடன் இணைந்துப் பார்த்தால் பிரிவைதான் ஏற்படுத்தும், என்றுள்ளார்.