காணும் பொங்கல்: கடற்கரை, பூங்காக்களில் குவிந்த மக்கள் கூட்டம்
சென்னை: காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி சென்னையில் மெரீனா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
தமிழர் திருநாளன பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் இறுதி நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
உற்றார் உறவினர்களை கண்டு களித்து அனைவரும் ஒன்று கூடி உண்ணும் நாளாக தமிழகம் முழுவதும் சிறப்பாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.
குவிந்த கூட்டம்
காணும் பொங்கலையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பொழுது போக்கு மையங்களில் பொது மக்கள் குவிந்தனர். மெரினா கடற்கரை இன்று களை கட்டியது. காலையில் இருந்து கடற்கரையில் மக்கள் குவியத் தொடங்கினர்.
கூட்டம் கூட்டமாக
இளம் தம்பதிகள், காதல் ஜோடிகள், பெற்றோர்கள் குழந்தைகளுடன் வந்தனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் கடற்கரை மணல் பரப்பளவில் இடங்களை ஆக்கிரமித்தனர். எம்.ஜி.ஆர். நினைவிடம், அண்ணா நினைவிடத்தை சுற்றியும், மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கலங்கரை விளக்கம்
மெரினாவிற்கு வந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி கலங்கரை விளக்கத்தை பார்க்கவும் சென்றது. நவீனப்படுத்தப்பட்ட கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி சென்னையின் அழகை கண்டு ரசித்தனர். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசை காணப்பட்டது. மெரினாவில் சிறு சிறு கடைகள் வழக்கத்தை விட இன்று அதிகம் காணப்பட்டது.
10000 போலீசார் பாதுகாப்பு
காணும் பொங்கலை யொட்டி, போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் இணை கமிஷனர் சங்கர் தலைமையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடற்கரையில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டு பிடிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 8 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரங்களில் அமர்ந்தபடியே போலீசார் பைனாகுலர் மூலமாக கூட்டத்தை கண்காணித்தனர்.
மாறு வேடத்தில் போலீசார்
இன்று மாலையில் 2 லட்சம் பேர் வரை மெரினாவில் கூடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 5 இடங்களில் புறக்காவல் நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் அடிக்கும் கொள்ளையர்களை பிடிக்கவும் மாறு வேடத்தில் போலீசார் சுற்றி வந்தனர். கடற்கரை காமராஜர் சாலையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசாரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
சிறுவர் பூங்காவில்
மெரினாவை போன்று பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும், கிண்டி சிறுவர் பூங்காவிலும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் குவிந்தனர். அங்குள்ள உயிரினங்களை பார்த்து சிறுவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விளையாட்டு சாதனங்களில் ஏறி மகிழ்ந்தனர். பறவைகள், பாம்புகளை பார்த்து பரவசம் அடைந்தனர்.
குழந்தைகள் உற்சாகம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காலை முதல் குவிந்தனர். சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் குழந்தைகளுடன் மிருக காட்சி சாலையை பார்வையிடவும், பேட்டரி காரில் வனப்பகுதியை சுற்றி பார்த்தனர்.
மகாபலிபுரத்தில் பயணிகள்
மகாபலிபுரம், முட்டுக்காடு, கடற்கரை பகுதிகளுக்கும் காணும் பொங்கலை கொண்டாட மக்கள் திரண்டனர். முட்டுக்காட்டில் படகு சவாரி, பாம்பு பண்ணை போன்றவற்றை பார்க்க பெருமளவு சென்றனர்.
பழவேற்காடு ஏரியில்…
பழவேற்காட்டில் காலை முதலே பொது மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் சமீபத்தில் திறக்கப்பட்ட கலங்கரை விளக்கம், நிழல் கடிகாரம், வரலாற்று புகழ் பெற்ற சிந்தாமணீஸ்வரர் டச்சுக்கல்லறை மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த முகத்துவாரம் பகுதிகளை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
தீவுத்திடல் பொருட்காட்சி
சென்னை தீவுத் தடலில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. பொருட்காட்சியில் உள்ள பொழுது போக்கு சாதனங்களில் ஏறி மகிழவும், அரங்குகளை சுற்றி பார்க்கவும் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர்.
மத்திய, மாநில அரசு துறைகளில் சார்பில் இடம் பெற்றுள்ள அரங்குகள், ராட்சத ராட்டினம், சிறுவர்களை மகிழ்விக்கும் விளையாட்டு சாதனங்களை சுற்றி மகிழ்ந்தனர்.
600 சிறப்பு பேருந்துகள்
காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரை, தீவுத்திடல், பெசன்ட்நகர், மகாபலிபுரம், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து பகுதிகளுக்கும் செல்ல இரவு 12 மணி வரையிலும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
குமரி கடற்கரையில்
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் காலை முதலே குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர். அதே திருச்செந்தூரில் முருகப் பெருமானை தரிசிக்க குவிந்த பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.