காணும் பொங்கல்: கூட்டம் அதிகரிக்கையில் சென்னை மெரினா பீச் சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
காமராஜர் சாலையில், பொதுமக்கள் கூட்டம் நிரம்பும் வரை எந்த போக்குவரத்து மாற்றமும் செய்யப்படாது.
உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக கூடும் போது, வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் போர் நினைவு சின்னத்தில் திருப்பப்பட்டு, பிளாக் ஸ்டாப் சாலை, அண்ணாசாலை, ஜி.பி.சாலை, மணிக்கூண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக செல்லலாம்.
அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு பாரதி சாலை, வாலாஜா சாலை வழியாக செல்லலாம். மேலும் பாரதி சாலையானது, கண்ணகி சிலையில் இருந்து ஒரு வழிப் பாதையாகவும், வாலாஜா சாலை சாலை-பெல்ஸ் சாலை ஜங்ஷனில் வாகனங்கள் நுழையாத வண்ணம் திருப்பப்படும்.( பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.) வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.