'கபடி வெற்றி அம்மாவுக்கு சமர்ப்பனம்'.. வெற்றியை ஜெயலலிதாவிற்கு அர்ப்பணித்த கபடி வீரர் சேரலாதன்
கபடி போட்டியில் பெற்ற வெற்றியை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சமர்ப்பனம் செய்வதாக கபடி வீரர் சேரலாதன் கூறியுள்ளார்.
சென்னை: உலக கோப்பை கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற சேரலாதன், இன்று சென்னை திருப்பிய உடன், அப்போலோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
குஜராத்தில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை கபடி போட்டியில் இந்தியா, ஈரானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா தொடர்ந்து 3வது முறையாக உலக கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது. வெற்றி பெற்ற இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சேரலாதன் இன்று சென்னை திரும்பினார்.
அவருக்கு விமானநிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து நேராக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சேரலாதன் சென்றார். அங்கு அவர், சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் சேரலாதன் கூறியதாவது:
உலக கோப்பை கபடியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் முதல்வரை பார்க்க வந்தேன். அவரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். முதல்வரின் உடல் நலம் நன்றாக தேறி வருவதாக மருத்துவர்கள் கூறினார்கள். விரைவில் அவர் வீடு திரும்புவார். அவர் முழு குணமடைய இறைவனை வேண்டுகிறேன். கபடி போட்டியில் பெற்ற வெற்றியை முதல்வருக்கு சமர்ப்பனம் செய்கிறேன். ஜெயலலிதா விளையாட்டுத் துறைக்கு அதிக உதவிகளை செய்துள்ளார் என்று சேரலாதன் கூறினார்.