காஞ்சிபுரத்தில் கபடி வீரர் இரும்புக்கம்பியால் அடித்து படுகொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கபடி வீரரை இரும்பு கம்பியால் அடித்து படுகொலை செய்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகேயுள்ள முசரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஜெகநாதன் (28) கபடி விளையாட்டு வீரர். காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் பிற மாவட்டங்களில் நடைபெறும் கபடி போட்டிகளில் ஜெகநாதன் பங்கேற்று விளையாடி வந்தார்.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி முசரவாக்கம் காலனி சேர்ந்த ராஜபதி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் ஜெகநாதனோடு சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது போதையில் ராஜபதிக்கும், ஜெகநாதனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ராஜபதி அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ஜெகநாதன் தலையில் தாக்கினார். தொடர்ந்து ராஜபதியின் நண்பர்களும் ஜெகநாதனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதையடுத்து ஜெகநாதன் தொலைபேசியில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்படி உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெகநாதனை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசுமருத்துவமனைக்கும், அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் சிகிச்சை பலனின்றி ஜெகநாதன் உயிரிழந்தார்.
இது குறித்து பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 5 பேரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.