கோலாகலமாக நடந்தேறியது மயிலை கபாலீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: 1 லட்சம் பக்தர்கள் திரண்டனர்
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது. இதனைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக சுமார் 2 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு கடந்த மார்ச் 26ம் தேதி முதல் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து கடந்த 28ம் தேதி முதல் இன்று வரை காலை, மாலையில் 100 சிவாச்சாரியர்களை கொண்டு ஹோமங்களும் இன்று காலை 6 மணியளவில் விசேஷ சாந்தி கும்ப திருமஞ்சனமும், தீர்த்த வினியோகமும் நடந்தது.
இன்று காலை 7.45 மணிக்கு கலச புறப்பாடு தொடங்கியது. பின்னர் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சுப்பிரமணியர் உட்பட அனைத்து சன்னிதிகளின் விமானங்கள் மற்றும் கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு 8.45 மணிக்கு மேல் அபிஷேகம் நடைபெற்றது. கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற போது குவிந்திருந்த பக்தர்கள் நமச்சிவாயா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீபஆரதானை காண்பிக்கப்பட்டது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். இன்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதிகளிலும் திரண்டுள்ளனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக ஏராளமான முன் ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் காவல்துறை செய்துள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முதலே வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்தனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக 39 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்கி டாக்கி வசதியுடன் 2 ஆம்புலன்ஸ்களும், 2 இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக சுமார் 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து பாதையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.