என்னாது சத்யம் இல்லையா... இதுக்கு தான் வந்தோமா?: ஏர் ஏசியாவில் வந்த 'கபாலி' ரசிகர்கள் போராட்டம்!
சென்னை: சத்யம் தியேட்டரில் கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க பெங்களூரில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் சென்னை வந்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் குதித்தனர்.
கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண சுமார் 160 ரசிகர், ரசிகைகள் ஏர் ஏசியா விமானம் மூலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள் சத்யம் தியேட்டரில் படம் பார்ப்பதாக இருந்தது.
இந்நிலையில் முன்னறிவிப்பு எதுவும் இன்றி அவர்கள் படம் பார்க்கும் இடத்தை சத்யத்தில் இருந்து வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவுக்கு மாற்றிவிட்டனர்.
ஏர் ஏசியா
சத்யம் சினிமாஸில் கபாலி படம், சாப்பாடு உள்ளிட்டவைக்காக பெங்களூர் ரசிகர்கள் ஏர் ஏசியாவிடம் ரூ.8 ஆயிரம் அளித்து அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுக்குத் தானா?
இது குறித்து பெங்களூரில் இருந்து வந்துள்ள இந்துமதி என்பவர் கூறுகையில், பிரசாத் ஸ்டுடியோவில் படம் பார்க்க விரும்பவில்லை. பிரசாத் ஸ்டுடியோவில் படம் பார்ப்பது வீட்டில் சிடியில் பார்ப்பது போன்று தான் இருக்கும். இதற்காகவா நாங்கள் அவ்வளவு பணம் செலவு செய்தோம் என்றார்.
சத்யம் சினிமாஸ்
ஏர் ஏசியா இந்தியா பிரிவின் சிஇஓ அமர் அப்ரோல் கூறுகையில், விமானம் காலை 7 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது. சத்யம் சினிமாஸில் படம் காலை 9 மணிக்கு துவங்க வேண்டியது. சத்யம் சினிமாஸில் முதல் காட்சி மதியம் 12 மணிக்கு தான் துவங்கும் என எங்களிடம் தெரிவித்தார்கள். அதனால் தான் பிரசாத் ஸ்டுடியோவுக்கு இடத்தை மாற்றினோம். இந்த சம்பவத்திற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
போராட்டம்
மதியம் 12 மணி காட்சியை பார்க்க தயார் என்றால் பிரசாத் ஸ்டுடியோவில் படம் பார்க்கத் தேவையில்லை என்று ஏர் ஏசியா தெரிவித்ததை ரசிகர்கள் ஏற்றனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.