பராசக்தி படத்தால் மாறாத தமிழ் சமூகமா என் படத்தால் மாறப்போகிறது.. பா.ரஞ்சித் தடாலடி கேள்வி
சென்னை: கபாலி படம் குறித்த சர்ச்சைகள், விமர்சனங்கள் குறித்து, புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் பதிலளித்தார்.
கபாலி திரைப்படம் தலித் திரைப்படம் என்றும், பிற சமூகத்தினரை சீண்டும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதுகுறித்து டிவி பேட்டியில் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது, உங்கள் மீது சாதி கண்ணோட்டத்தோடுதான் விமர்சனம் முன் வைக்கப்படுகிறது என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு ரஞ்சித் அளித்த பதில் இதுதான்:
புரிகிறது, சொல்ல மாட்டேன்
அந்த பிரச்சினையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதற்கு பதில் சொல்ல அவசியம் இல்லை. எனக்கு தோணவும் இல்லை என்றார் ரஞ்சித்.
அம்பேத்கர்
அம்பேத்கரை பற்றி நிறைய பேசியுள்ளது கபாலி படம். இனிமேல், அம்பேத்கர் குறித்து தமிழ் சினிமாக்கள் பேசுவதற்கு, கபாலி படம் டிரெண்ட் செட்டிங்காக இருக்குமா? என்ற கேள்விக்கு, மக்களுக்கு அவசியமான கருத்தை எந்த தலைவர் பேசியிருந்தாலும் அதுகுறித்து பேசலாம் என்று பதிலளித்தார் ரஞ்சித்.
பெரியாரையும் பிடிக்கும்
அம்பேத்கர் பேசியதை மட்டுமே பேச வேண்டும் என்று அவசியம் இல்லை. பெரியார், சேகுவேரா ஆகியோரும் எனக்கு பிடித்த தலைவர்கள்தான். பெண் அடிமைத்தனம் இருக்க கூடாது என்பது பெரியாரிடமிருந்து கற்றுக்கொண்டேன். எனவேதான் பெண் கேரக்டர்களை வலிமையானவர்களாக படங்களில் காட்டுகிறேன் என்றும் ரஞ்சித் தெரிவித்தார்.
மகிழ்ச்சி
படத்தில் அடிக்கடி வரும் 'மகிழ்ச்சி' வசனத்தை போலவே உங்களுக்கும் படத்தால் மகிழ்ச்சி கிடைத்ததா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஞ்சித், மலேசிய மக்களின் பிரச்சினை பற்றிதான் படத்தில் பேசினேன். எனவே, அவர்களுக்கு படம் பிடிக்க வேண்டும் என்ற கவலை இருந்தது. ஆனால் மலேசியாவில் இருந்து பல வாழ்த்துக்கள் வந்தன. மலேசிய பிரச்சினை பற்றி மேலதிக தகவல்களை அறிய முடிந்தது. வணிக ரீதியாகவும் படம் வெற்றி பெற்றுள்ளது. மலேசிய மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளது மகிழ்ச்சியே என்றார்.
விவாதம் தேவை
மாற்று சினிமாவை நோக்கி முன் நகர்வீர்களா என்ற கேள்விக்கு, மாற்று சினிமா எனக்கு அவசியப்படவில்லை. மெயின் திரைப்படங்களில் கருத்தை முன்வைக்கிறேன். ஒரு விவாதம் நடைபெற வேண்டும் என்ற ஆசை மட்டுமே எனக்கு உள்ளது. பராசக்தி போன்ற படங்கள் வந்ததும் தமிழ் சமூகம் மாறியிருக்க வேண்டுமே. இன்னும் மாறவில்லையே. எனவே, எனது படங்களால் தமிழ் சமூகம் மாறிவிடும் என நான் நினைக்கவில்லை. விவாதத்தை மட்டுமே முன் வைக்கிறேன். இவ்வாறு ரஞ்சித் தெரிவித்தார்.