எல்லாத்தையும் பார்த்துட்டார் மாஃபா.. அவர் போகாத கட்சியே இல்லை.. கடம்பூர் ராஜு தடாலடி!
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் போய்விட்டு வந்தவர்தான் மாஃபா பாண்டியராஜன் என்று கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.
கோவில்பட்டி: ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தமிழகத்தில் உள்ள எல்லாக் கட்சிகளுக்கும் சென்று வந்தவர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிளவுபட்டது. பின்னர், சசிகலா குடும்பம் ஓரம் கட்டப்பட்டதை அடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணையும் முயற்சிகளை மேற்கொண்டன.
சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளையும் ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓ.பி.எஸ். அணி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இரு அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் மாற்றி மாற்றி கருத்துக்களை தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தொடங்குவதிலேயே பிரச்சனை எழுந்தது.
பின்னர், ஓ.பன்னீர்செல்வம் - முதல்வர் பழனிசாமி அணிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்த தலா 7 பேர் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டன. ஆனாலும், இரு அணிகளும் முறைப்படியான பேச்சுவார்த்தையை தொடங்காமல் ஒரு அணியை மற்றொரு அணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், இரு அணிகளும் இணைவதில் எங்கள் தரப்பில் இருந்து எந்தவித முட்டுக்கட்டையும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதே போன்று, அதிமுக அம்மா கட்சி எம்பி தம்பிதுரையும் இரு அணிகள் இணைவதில் எந்த சிக்கலும் இனி இருக்காது என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு இரு அணிகள் இணைவதற்கு நிபந்தனை எதுவும் விதிக்காமல் பெருந்தன்மையுடன் இருக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும், ஆட்சியும், கட்சியும் எங்களிடம் தான் உள்ளது என்று கூறிய கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது, அனைத்துக் கட்சிகளுக்கும் போய்விட்டு வந்தவர் பாண்டியராஜன் என்று விமர்சனம் செய்தார்.