'கிங்காங்' படம் பார்த்துட்டுப் பேசிட்டார் போல.. விஜயகாந்த்தை வாரிய காடுவெட்டி குரு
தர்மபுரி: தர்மபுரி சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட ஏலகிரியில் நடந்த பாமக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் எம்.எல்.ஏவும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
ஏற்கனவே அதிமுக அமைச்சர்களை மிகக் கேவலமாக விமர்சனம் செய்து பேசியவர் காடுவெட்டி குரு. அவர்கள் ஜெயலலிதா காலில் விழுந்து கும்பிடுவதை அசிங்கமாக விமர்சித்தவரும் கூட.
இந்த நிலையில் விஜயகாந்த்தை அவர் குடிகாரர், நிதானம் இல்லாமல் பேசுபவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக காடுவெட்டி பேசிய பேச்சிலிருந்து (பலவற்றைப் போட முடியாது.. எனவே சில மட்டும்):
பால் சொம்போடு காத்திருந்த கருணாநிதி
உங்கள் கூட்டணியில் விஜயகாந்த் சேருவாரா என்று சில தினங்களுக்கு முன்பு கலைஞரை கேட்கிறார்கள். அதற்கு, கலைஞர் பழம் கனிந்து கொண்டிருக்கிறது, ஓரிரு நாட்களில் பழம் கனிந்து பாலில் விழ இருக்கிறது. நான் பால் சொம்போடு காத்திருக்கிறேன் என்று சொன்னார்.
புளிச்சுப் போன பழம்
பழம் கனிந்ததா..? பழம் கனிந்து பாலில் விழுந்ததா..? பால் புளித்துப் போய்விட்டது. நான் முன்பே சொன்னேன் பாலை வைத்துக்கொண்டு அந்த பழத்தை எதிர்பார்த்தால் வராது. நல்ல ஃபாரின் சரக்காக வைத்துக்கொண்டு கூப்பிட்டால் உடனே வந்துவிடும்.
நிதானம் இல்லாத விஜயகாந்த்
ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்று சொன்னால், எந்த நேரமும் நிதானம் இல்லாமல் குடிபோதையில் எதையோ உளறிக்கொண்டிருக்கிற ஒரு தலைவர் நடிகர் விஜயகாந்த். மேடைக்கு வரும்போதே தட்டுத்தடுமாறிதான் வருகிறார். அவரை இருவர் தாங்கிப்பிடிக்க வேண்டியிருக்கிறது. அவர் நடத்திய மாநாட்டில் என்ன சொன்னார் என்று யாருக்கும் புரியவில்லை.
கிங்காங் படம் பார்த்திருப்பார் போல
கிங்காக போகிறேன், கிங் மேக்கராக போகிறேன் என்று சொன்னார். சில பேர் ஆங்கிலப்படம் கிங்காங் பார்த்திருப்பார்போல என்று சொன்னார்கள். ஒரு பொதுவாழ்க்கையில் இருப்பதற்கு எந்தவித தகுதியும் இல்லாத நடிகர் விஜயகாந்துக்காக இங்கே போட்டிப்போடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு. இவர்களுடைய தகுதி என்ன? தேர்தலுக்காக ஓட்டுக்காக எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நினைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
ஒரே ரூம்லதான் இருக்காங்களாம்
மக்கள் நலக் கூட்டணியில் உள்ளவர்கள் எங்கள் கூட்டணியை உடைக்கப் பார்க்கிறார்கள் என்கிறார்கள். மேடையிலிருக்கும் போது கூட ஒருத்தருடைய கையை ஒருவர் இறுக்கமாக பிடித்துக்கொண்டே நிற்கிறார்கள். இரவில் கூட ஒரே ரூம்லதான் படுத்திருக்காங்கலாம். காலையில் எழுந்ததும் ஒன்றாகத்தான் வாக்கிங் போறாங்க. நாங்க புரட்சி செய்யப்போகிறேன் என்று வைகோ சொல்கிறார்.
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
வைகோ, கலைஞரை குறை சொல்லிப்பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது..? அவரும் அந்தக்கட்சியில் இருந்தவர். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இவர் வந்து என்ன செய்யப்போகிறார்..? பாமகவைத்தவிர அனைத்துக் கட்சிகளுக்கும் தமிழகம் இந்த தேர்தலில் டெண்டர் விடப்படுகிறது. அதை யார் எடுப்பது..? என்பதில்தான் போட்டியே.
ஆட்டோவில் போனார் ... டீ குடித்தார்
கலைஞர் பேசிய வசனங்களையெல்லாம் மறக்க முடியுமா..? வசனம் பேசி பேசியே ஆட்சிக்கு வந்தவர் கலைஞர். அவர்தான் இப்போது தன் மகன் ஸ்டாலினை நமக்கு நாமே என்று பயணம் அனுப்பியிருக்கிறார். ஸ்டாலின் வந்தார் ஆட்டோவில் போனார். டீ குடித்தார் விவசாயிகளை சந்தித்தார் குறைகளை கேட்டார்.
வாழை மரத்தைப் பார்த்து
தஞ்சாவூர்ல ஒரு விவசாயியிடம் நெல்லைப் பார்த்து இது என்ன நெல்லானு? கேக்குறார். வாழை மரத்தைப் பாத்து இது என்ன மரம்ங்குறார்..? பாவம் அவருக்கும் விவசாயத்துக்கும் சம்பந்தமே இல்லை. அந்த விவசாயியைப் பாத்து கடைசியா ஒண்ணு கேட்டார் நீங்க ஏன் கோவணம் கட்டியிருக்கீங்க...? அதுக்கு அந்த விவசாயி உங்க ஆட்சியில இதுதான் மிச்சம் இதையும் உருவ வந்துட்டீங்களானு கேட்டான்.
செவ்வாயிலா இருந்தார்
இப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள். இவ்வளவு நாட்கள் ஸ்டாலின் என்ன செவ்வாய் கிரகத்துலயா இருந்தார் ஸ்டாலின். ஆட்சியில் இருக்கும் போது இதையெல்லாம் செய்திருந்தால் உங்களுக்கு சிலை வைத்திருப்போம். ஓட்டுக்காக எப்படியெல்லாம் நடிக்கிறீர்கள் இனி உங்களுடைய வசனமும் நடிப்பும் செல்லுபடியாகாது என்றார் குரு.