ஊருக்குள் எங்களை மிரட்டுகிறார்கள்.. கணவருடன் போலீஸில் தஞ்சமடைந்த காடுவெட்டி குரு மகள்
உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காடுவெட்டி குரு மகள் போலீசில் தஞ்சமடைந்தனர்.
Recommended Video
கும்பகோணம்: "யாரை கேட்டு கல்யாணம் பண்ணீங்க? ஊருக்குள்ள வந்தீங்க....???? என்று ஊருக்குள்ள எங்களை மிரட்டுகிறார்கள் சார்.. என்று காடுவெட்டி குருவின் மகள், தனது கணவருடன் போலீசில் தஞ்சம் அடைந்துள்ளார்.
பாமகவின் முக்கிய நிர்வாகியான காடுவெட்டி குரு சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்தார். அவர் எப்போது இறந்தாரோ, அப்போதிலிருந்து அவரது குடும்பத்தில் பிரச்சனை ஆட்டி எடுக்கிறது.
சொத்துக்காக என் பிள்ளைகளை என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கறாங்க, அவங்களோடு என்னை சேர்த்து வையுங்கள் என்று காடுவெட்டி குரு மனைவி லதா ஒரு பக்கமும், "எங்க அம்மாவை சேர்த்து வைங்க என்று மகன் ஒரு பக்கம், எங்களை இப்படி நடுத்தெருவுல நிறுத்திட்டீங்களே என்று பாமக நிர்வாகியை திட்டிதீர்த்த காடுவெட்டி குருவின் அம்மா ஒரு புறமும் என மாறி மாறி புகார்களை எழுப்பி வந்தார்கள்.
திருமணம் நடைபெற்றது
இப்படி உறவுகளுக்கிடையே புயல் வீசி வந்த நேரத்தில், நேற்று திடீரென்று அந்த குடும்பத்தில் ஒரு சுபகாரியம் நிகழ்ந்துள்ளது. காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிக்கைக்கும் குருவின் மூன்றாவது தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜுக்கும்தான் கல்யாணம் நடந்தது.
மீனாட்சி நடத்தி வைத்தார்
இவர்கள் ரொம்ப நாளாகவே காதலித்து வந்திருக்கிறார்கள். இந்த திடீர் கல்யாணத்தை பார்த்து எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். காடுவெட்டி குருவீன் அக்கா மீனாட்சிதான் இந்த கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார். ஆனால் காடுவெட்டி குருவின் மனைவி இதில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.
உயிருக்கு ஆபத்து
ஒரு நல்லது நடந்துள்ளது என்று நினைத்தால், இந்த காதல் ஜோடி திருமணத்தை ஊருக்குள் சிலர் விரும்பவில்லையாம். விரும்பவில்லை என்றால்கூட பரவாயில்லை, இந்த ஜோடியை ஊருக்குள்ளே வரவே கூடாது என்று வேறு சொல்கிறார்களாம். அதனால் இந்த ஜோடி இன்று திடீரென தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு மணக்கோலத்தில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
பாதுகாப்பு
ஏற்கனவே எங்களிடமிருந்து எல்லாத்தையும் பறித்து கொண்டார்கள், இப்போ ஊருக்குள் வந்தால் விரட்டுவோம் என்று சொல்வதால், உயிருக்கு நீங்கள்தான் பாதுகாப்பு தர வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
பெரும் அதிர்ச்சி
இந்த கல்யாண ஜோடியுடன் கூடவே கல்யாணம் செய்து வைத்த மீனாட்சியும் வந்திருக்கிறார். நேற்று கல்யாணம் ஆனவர்கள் மாலையும் கழுத்துமாக இன்று போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.