பாமக முன்னாள் எம்எல்ஏ காடுவெட்டி குருவின் இறுதிச் சடங்கு
பாமக முன்னாள் எம்எல்ஏ காடுவெட்டி குருவின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.
ஜெயங்கொண்டம்: பாமக முன்னாள் எம்எல்ஏ காடுவெட்டி குருவின் இறுதிச் சடங்கு இன்று அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது.
பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ. குரு உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார்.
நுரையீரல் தொற்றால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த ஜெ.குருவுக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உயிர்பிரிந்தது.
காடுவெட்டி ஜெ.குரு மாநில வன்னியர் சங்க தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் அவரது மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கும் வகையில் பாமக , வன்னியர் சங்கம், பாமக தொழிற்சங்க கொடிகள் ஒரு வாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குருவின் இறுதிச் சடங்கு இன்று காலை நடைபெறுகிறது.
ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டியில் குருவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் குரு என்பது குறிப்பிடத்தக்கது.