ஓரம் கட்டப்படும் காடுவெட்டி குரு.. கடும் அதிருப்தியில் ஆதரவாளர்கள்.. பாமகவில் படபடப்பு!
பாமகவில் காடுவெட்டி குரு ஓரம்கட்டப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
சென்னை: பாமகவில் காடுவெட்டி குரு ஓரம் கட்டப்பட்டிருப்பதால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனராம்.
அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைத்து வந்த பாமக தற்போது தனித்துப் போட்டி என கூறியது. இருப்பினும் தனித்துப் போட்டியிட்டு பாமகவால் சாதிக்க முடியவில்லை.
அண்மையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவும் பாமக தரப்பு முயற்சித்தது. ஆனால் ஸ்டாலின் தரப்பு இதை விரும்பவில்லை.
திமுகவுடன் மோதல்
இதையடுத்து ஸ்டாலின் மற்றும் பாமக இடையேயான மோதல் பகிரங்கமானது. இருதரப்பும் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
அன்புமணி நிலைப்பாடு
தற்போது பாமகவுக்குள்ளேயும் சலசலப்பு கிளம்பியுள்ளது. அக்கட்சியைப் பொறுத்தவரையில் தந்தையையும் தம்மையும் மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என்பதில் அன்புமணி உறுதியாக உள்ளாராம்.
ஓரம்கட்டப்பட்ட குரு
இதனால் வன்னியர் சங்கத்துக்கு தலைவராக உள்ள பாமக மூத்த தலைவர் காடுவெட்டி குருவை அமைதியாக இருக்குமாறு சொல்லியிருக்கிறார்கள். அவரை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கவும் வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
தனியே....
தற்போது காடுவெட்டி குரு என்ற பெயரே பாமகவில் அடிபடாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது அவரது ஆதரவாளர்களை கொதிக்க வைத்துள்ளதாம். இதனால் வன்னியர் சங்கத்தின் பெயரில் தனியே நிகழ்ச்சிகளை நாம் நடத்துவோம் என அவரது ஆதரவாளர்கள் தூபம் போட்டு வருகிறார்களாம்.
வேல்முருகன்
நீரு பூத்த நெருப்பாக இந்த விவகாரம் உழன்று கொண்டிருருப்பதால் பாமகவில் படபடப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே பாமகவில் இருந்து வேல்முருகன் நீக்கப்பட்டு அவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.