எஸ்.சி.வி. மூடப்படுவதாக ஸ்குரோலிங் ஒளிபரப்ப தேவையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: சன் குழுமத்தின் கேபிள் ஒளிபரப்பு நிறுவனமான எஸ்.சி.வியை நடத்தும் கல் கேபிள்ஸ் உரிமம் ரத்து விவகாரத்தில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் ஒரு பகுதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சன் குழுமத்தின் கல் கேபிள்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விட்டல் சம்பத்குமரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனு விவரம்:
கல் கேபிள் நிறுவனம் தொலைக்காட்சி சேனல்களை டிஜிட்டல் முறையில் சென்னை, கோவை உள்பட பல பகுதிகளில் எம்எஸ்ஓ மூலம் ஒளிபரப்பி வருகிறது. இதற்காக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை உரிமம் வழங்கியுள்ளது.
இந்த உரிமத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து பாதுகாப்பு ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், மத்திய உள்துறை அமைச்சம் பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
அது தொடர்பாக எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் சென்னை, கோவை ஆகிய நகரங்களின் எம்எஸ்ஓ உரிமத்தை ரத்து செய்து கடந்த 20-ஆம் தேதி மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை உத்தரவிட்டது.
இது தொடர்பாக எங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், எங்களது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக எங்களது வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், 15 நாள்களுக்குப் பிறகு எங்களது கேபிள் நிறுவனம் ஒளிபரப்பாகாது, வேறு கேபிள் நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளுங்கள் என்று ஒளிபரப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் முன்பு வியாழக்கிழமை நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, மத்திய அரசு உத்தரவின் ஒரு பகுதியான, 15 நாள்களுக்குப் பிறகு எங்களது கேபிள் நிறுவனம் ஒளிபரப்பாகாது, வேறு கேபிள் நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளுங்கள் என்று ஒளிபரப்புமாறு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 2-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.