கமல்ஹாசன் திடீர் டெல்லி பயணம்.. ஏன், எதற்காக?
ராகுலிடம் கூட்டணி குறித்து பேசவில்லை என்று கமல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ராகுல் காந்தியிடம் கூட்டணி குறித்து பேசவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையை ஏற்கும்விதமாக கமல், அவ்வப்போது சில சிக்னல்களை காட்டி வந்தார். இதனை ஊர்ஜிதம் செய்யும் விதமாக சமீபத்தில் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியையும் சந்தித்து பேசினார்.
இதன் பின்னர், நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றும் தெரிவித்தார். அத்துடன், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கமல் கூறியிருந்தார். இதனால் பலமான கூட்டணி ஒன்று தயாராக போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் உருவாகி வந்தது.
இந்நிலையில் மீண்டும் டெல்லி செல்வதற்காக கமல் இன்று பிற்பகல் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்கள், இதற்கு முன்னால் கமல், ராகுலை சந்தித்தபோது என்ன பேசினார் என்பது குறித்த அனைத்து கேள்விகளையும் கேட்டனர். அதற்கு பதிலளித்த கமல், ராகுல் காந்தியிடம் தான் கூட்டணி குறித்து எந்த பேச்சும் பேசவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உள்ளாட்சி தேர்தலை நடத்த மக்கள் நீதி மய்யமும் முயற்சி செய்யும் என்று கூறிய கமல், உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் என்றுமே துணையாக இருக்கும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.